-டில்லி சிறப்பு நிருபர்- 'நீதித்துறை ஊழல்கள்' என்ற தலைப்பில் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில்

-டில்லி சிறப்பு நிருபர்-

‘நீதித்துறை ஊழல்கள்’ என்ற தலைப்பில் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பாடத்தை சேர்த்த மூன்று பேராசிரியர்கள் அடுத்த தலைமுறைக்கு கல்வி கற்பிக்கும் பாடப்புத்தகங்களை தயாரிக்க தகுதியற்றவர்கள். வருங்காலங்களில் பாடத்திட்டங்கள் அல்லது பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணியில் அவர்களை ஈடுபடுத்தக் கூடாது’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின், 8ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், ‘நீதித்துறை ஊழல்கள்’ என்ற தலைப்பில் என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சேர்த்த புதிய பாடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விசாரணை

இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் விபுல் பன்சோலி அடங்கிய அமர்வு தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரம் பல கேள்விகளை எழுப்புகிறது. ஒப்புதல் பெறாமல் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இது சாதாரண நடைமுறை என எப்படி கடந்து போவது? பாடத்திட்டங்களை இப்படித்தான் தயாரிக்கிறீர்களா? குறிப்பிட்ட பாடம் உயர் நிலை அதிகாரிகளின் அனுமதி இல்லாமலேயே இடம் பெற்றதா? இப்படித் தான் சாதாரணமாக ஒரு பாடத்தை புத்தகத்தில் சேர்க்க அனுமதிக்கப்படுகிறதா? இந்த பாடத்தை தயாரித்த பேராசிரியர்கள் மைக்கேல் டானினோ, சுபர்ணா திவாகர் மற்றும் அலோக் பிரசன்ன குமார் மூவரும், இனி வருங்காலங்களில் பாடத்திட்டங்கள் அல்லது பாடப்புத்தகங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடக்கூடாது.

ஆலோசனை

மூவரும் அடுத்த தலைமுறைக்கு கல்வி கற்பிக்கும் பாடப்புத்தகங்களை தயாரிக்க தகுதியற்றவர்கள். மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூன்று பேராசிரியர்களுடனும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. அரசு நிதி உதவி பெறும் எந்தவொரு கல்விப் பணியிலும் அவர்களை ஈடுபடுத்தக் கூடாது.

நீதித்துறை தொடர்பான பாடங்களை சேர்க்கும்போது, ஓய்வு பெற்ற நீதிபதி, பிரபல வழக்கறிஞர் மற்றும் மூத்த கல்வியாளர் அடங்கிய குழுவினர் மற்றும் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை ஆகியவற்றின் ஆலோசனையை பெற்று, என்.சி.இ.ஆர்.டி., செயல்பட வேண்டும்.

நீதித்துறை குறித்த பாடத்திட்டத்தை இறுதி செய்வதற்கு துறை சார்ந்த நிபுணர்களை கொண்ட குழுவை ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link