திருச்சி:
திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மேற்கு ஆசியாவில் நடக்கும் போரால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். இந்தப் போரானது சர்வதேச அளவில் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியையும் பாதித்துள்ளது. அத்தியாவசிய தேவை விநியோகத்திலும் இவை எதிரொலித்துள்ளன.
எந்த ஒரு சூழலிலும் இந்திய மக்களின் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும்.
வதந்திகளை நம்ப வேண்டாம். உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே பகிர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் எத்தகைய சிறந்த தேசம் என்பதை உலக நாடுகளுக்கு நிரூபித்தோம். அதேபோல் இந்த சூழலையும் வெற்றிகரமாகக் கடந்து செல்வோம்.
வரும் சட்டசபைத் தேர்தல் தமிழ்நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. மக்கள்மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. நாம் அனைவரும் இணைந்து வளமான தமிழகத்தை உருவாக்குவோம். நாம் அனைவரும் இணைந்து வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவோம்.
தமிழ்நாடு மாற்றத்தை விரும்புகிறது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது என தெரிவித்தார்.
