சென்னை: மாமியாரின் வங்கி கணக்கு வாயிலாக, 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, பி.எஸ்.என்.எல்., அதிகாரி மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே, வேப்பிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். பி.எஸ்.என்.எல்., சென்னை வட்டத்தின் முதன்மை பொது மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இதற்கு முன், 2017 – 2020ம் ஆண்டு வரை, கேரள மாநிலம் திருச்சூர், திருவனந்தபுரம் நகரங்களில், முதன்மைப் பொது மேலாளராக பணியாற்றி உள்ளார்.
அந்த காலகட்டத்தில், கேரள மாநிலத்தை சேர்ந்த திலீப் என்ற ஒப்பந்ததாரர், ஏழு கோடி ரூபாய்க்கு மேல், ‘கேபிள் ஒயர்கள்’ பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதற்கான தொகையை விடுவிப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட, திலீப்பிடம் இருந்து, ராஜேந்திரன், லஞ்சமாக, முதலில், 10,000 ரூபாய் வாங்கி உள்ளார்.
அதன்பின், தன் மாமியார் ஜானகியின் வங்கி கணக்கு வாயிலாக, 1.90 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, லஞ்சமாக பெற்றுள்ளார். இது குறித்து, பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு அதிகாரிகள், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
முதல்கட்ட விசாரணையில், ராஜேந்திரன் லஞ்சம் வாங்கி இருப்பதை உறுதி செய்தனர். அதன் அடிப்படையில், சில தினங்களுக்கு முன், மதுரை, விருதுநகர் மற்றும் சென்னையில் உள்ள, ராஜேந்திரன் வீடு மற்றும் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, ராஜேந்திரன் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களை ஆய்வு செய்த போது, மாமியாரின் வங்கி கணக்கு வாயிலாக, லஞ்சம் வாங்கியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ராஜேந்திரன் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
