தமிழகத்திற்கு இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. நேற்று திருச்சியில் அரசு நிகழ்ச்சி மற்றும் என்.டி.ஏ கூட்டணி கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். திருச்சியை அடுத்த பஞ்சப்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை மணலியில் உள்ள இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் மசகு எண்ணெய் தயாரிப்பு ஆலை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 9 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் உள்ளிட்ட 5,655 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
மேலும், நாகர்கோவில் – சரலப்பள்ளி இடையிலான அம்ரித் பாரத் உள்ளிட்ட 5 புதிய ரயில்களின் சேவைகளையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருநை அருங்காட்சியக வடிவ கேடயத்தை நினைவுப் பரிசாக வழங்கினார். மேலும், மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், முருகன் மற்றும் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
