வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதலுக்கு ஐநா கண்டனம்; தீர்மானம் நிறைவேற்ற ஒப்புதல்

நியூயார்க்: வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் கொடூரமான தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரி, சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற ஐநா பாதுகாப்பு கவுன்சில் முன் வந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, யுஏஇ, சவுதி அரேபியா, ஓமன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக, துபாயில் உள்ள வங்கிகள், பொருளாதார மண்டலங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, அமெரிக்காவைச் சேர்ந்த சிட்டி வங்கியின் கிளைகள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று அதிகாலை 2.45 மணியளவில் துபாயில் கிரீக் ஹார்பர் பகுதியில் உள்ள உயரமான குடியிருப்பு கட்டடத்தின் மீது ஈரான் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், கட்டத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மக்கள் உடனடியாக அந்தக் கட்டடத்தில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அனைத்து குடியிருப்பாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் கொடூரமான தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரி, ஐநா பாதுகாப்பு கவுன்சில் சிறப்பு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து பஹ்ரைனின் ஐநா தூதர் ஜமால் அல்ரோவாய் கூறியதாவது; இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு எதிராக ஈரான் நடத்தி வரும் இந்தத் தாக்குதலை சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து எதிர்க்கிறது. குறிப்பாக, உலகப் பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் சர்வதேச வர்த்தகப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வாய்ந்த வளைகுடா பகுதியில் இத்தகைய தாக்குதல்கள் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது, எனக் கூறியுள்ளார்.

Source link