வரும் தேர்தலில், காரைக்குடிக்குப் பதிலாக சிவகங்கை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க அறிவாலயத்தில் பேச்சுவார்த்தைகள் தடதடக்கின்றனவாம். பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், இப்போதே காரைக்குடி தொகுதியைக் கேட்டு தி.மு.க உடன்பிறப்புக்கள் முட்டி மோதத் தொடங்கியிருக்கிறார்கள். அதிலும், தி.மு.க மாவட்ட துணைச் செயலாளரான ஜோன்ஸ் ரூஸோ, தனது சீனியாரிட்டி மற்றும் தனிப்பட்ட செல்வாக்கை வைத்து சீட்டுக்காக கடுமையாகவே காய் நகர்த்துகிறாராம். அதேநேரத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், துணை முதல்வரிடம் தனக்குள்ள செல்வாக்கை வைத்து ‘சீட்’ ரேஸில் நுழைந்திருக்கிறாராம். இருவரும் அறிவாலயம், அன்பகம் என்று மாறி மாறி முட்டி மோதுவதால் காரைக்குடி அரசியலில் அனல் பறக்கிறது.
