DMK plans to reduce the seats of its alliance parties | கூட்டணியை சரிகட்ட தி.மு.க போடும் ஸ்கெட்ச்!

தி.மு.க கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கடந்த 9-3-2026 அன்று அறிவாலயத்தில் இரண்டாம் கட்ட தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையை நடத்தியது. பேச்சுவார்த்தை முடிந்ததும், “எங்கள் கட்சியின் உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்திவிட்டு வருகிறோம்” என முடிவு சொல்லாமலேயே சென்றுவிட்டது. ஏற்கெனவே ம.தி.மு.க-வும் “தொகுதி உடன்படிக்கை குறித்து உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவெடுத்து சொல்கிறோம்” என்று அறிவித்து பின்னர் உடன்படிக்கை கையெழுத்தானது. இப்படி ‘கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்ய காலம் தாழ்த்துவது ஏன்?” என நாம் விசாரித்தோம்.

மதிமுக - திமுக தொகுதிப் பங்கீடு

மதிமுக – திமுக தொகுதிப் பங்கீடு

நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள், “காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக மூன்று தொகுதிகளும், தே.மு.தி.க-வுக்கு ஆறு முதல் ஏழு இடங்களை வழங்கவும் தி.மு.க தலைமை திட்டமிட்டுள்ளது. இதனால் தி.மு.க-வின் கணக்கில் பத்து தொகுதிகள் குறைய உள்ளது.

இதைச் சரிகட்டவே, ஏற்கெனவே கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் தொகுதிகளைக் குறைத்துக்கொள்ளச் சொல்லி தி.மு.க பேச்சுவார்த்தைக் குழு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், கூட்டணிக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

வி.சி.க கடந்த முறை ஆறு இடங்களில் போட்டியிட்டது. இந்த முறை பத்து இடங்களை எதிர்பார்த்தது. கூட்டணியில் கூடுதலாக புதிய கட்சிகள் இடம் பெற்றுள்ளதை தி.மு.க சுட்டிக்காட்டியதால், ‘சரி எட்டாக தாருங்கள்…’ என வி.சி.க இறங்கிவந்தது. ஆனால், தி.மு.க- வோ, ‘நீங்க ஐந்தாக வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று சொன்னதும் அப்செட்டாகிவிட்டனர் சிறுத்தைகள்.

அவர்கள் நிலைதான் அப்படியென்றால், இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்த்த கம்யூனிஸ்ட்களிடம், ‘கடந்த முறை ஆறு இடங்களில் போட்டியிட்டு ரெண்டுலதான் ஜெயிச்சீங்க. அதனால இந்த முறை நான்கு தொகுதிகளை மட்டும் வாங்கிக்குங்க’ என சொல்லியுள்ளார்கள். இதனால் கடுப்பாகி, முடிவு ஏதும் சொல்லாமலேயே அறிவாலயத்திலிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்கள்.

Source link