புதுடில்லி: கச்சா எண்ணெய் தற்போது 40 நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை உள்ளிட்டவை பற்றாக்குறை இல்லை என லோக்சபாவில் மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் புரி கூறியுள்ளார்.
லோக்சபாவில் அவர் கூறியதாவது: நவீன எரிசக்தி வரலாற்றை உலகம் இதுவரை பார்த்தது இல்லை. இந்தியாவின் கச்சா எண்ணெய் நிலை பாதுகாப்பாகவும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கச்சா எண்ணெய் அளவை விட கூடுதலாக நம்மிடம் உள்ளது. போருக்கு முன்பு, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 45 சதவீதம் நடந்தது. பிரதமரின் சிறந்த ராஜதந்திரம் மற்றும் நல்லெண்ணம் காரணமாக, இந்த காலகட்டத்தில் அந்த ஜலசந்தி வழியாக வரும் அளவை விட கூடுதலாக உள்ளது.
போர் துவங்குவதற்கு முன்னர், ஹார்முஸ் ஜலசந்தி பகுதி அல்லாமல் மாற்று வழியாக 55 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது அது 70 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது.
2006 மற்றும் 2007 ம் ஆண்டுகளில் 27 இடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் தற்போது 40 இடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழு அளவில் செயல்படுகின்றன. பல நேரங்களில் 100 சதவீதத்தை தாண்டி இயங்குகின்றன. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை, ஏடிஎப் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு இல்லை. பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், மண்ணெண்ணை ஆகியவற்றின் இருப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மாற்று வழிகளில் அதிகளவு எல்என்ஜி சரக்கு கப்பல்கள் வந்து கொண்டு உள்ளன. இந்தியாவில் போதுமான அளவு காஸ் உற்பத்தி நடக்கிறது. நீண்ட நாட்கள் மோதல் நீடித்தாலும், இத்தகைய நிலையை தக்க வைத்துக் கொள்வதற்கான விநியோக ஏற்பாடுகள் யெ்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்கும், தொழில்துறையினருக்கும் தேவையான மின் உற்பத்தி உறுதி செய்யப்பட்டு உள்ளது.அமெரிக்கா, நார்வே, கனடா, அல்ஜீரியா மற்றும் ரஷ்யா நாடுகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில், சுத்திகரிப்பு நிலையங்களில் மூலம் கூடுதலாக 28 சதவீத எல்பிஜி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கூடுதல் கொள்முதல் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது. இந்தியாவில், 33 கோடி குடும்பங்களின் சமையல் அறைகளில் குறிப்பாக, ஏழைகளுக்கு எவ்வித பற்றாக்குறை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதே மோடி அரசின் தலையாய கடமை. உள்நாட்டு விநியோக சங்கிலி முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் விநியோகச் சுழற்சியிலும் எவ்வித மாற்றமும் இல்லை.
வதந்திகளை பரப்புவதற்கோ, பொய் தகவல்களை பரப்புவதற்கோ ஏற்ற தருணம் அல்ல. வரலாற்றில் மிகத் தீவிரமான உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை இந்தியா தற்போது எதிர்கொண்டு வருகிறது. பழ விநியோகம் தொடர்கிறது. வீடுகள் முதல் பண்ணைகள் வரை எரிவாயுக்கு முன்னுரிமை அளித்துவருகிறோம். எல்பிஜி உற்பத்தி 28 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நலனை முன்னிறுத்தி, இந்த நெருக்கடியை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கும், எரிசக்தி போராளிகளுக்கும் இந்தியா ஒற்றுமையாக ஆதரவு அளிக்க வேண்டும்.
கள்ளச்சந்தையில் பதுக்கப்படுவதை தடுக்கவும், சேவைத்துறையினருக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதையும் உறுதி செய்ய வணிகரீதியிலான சிலிண்டர் விநியோகம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. வணிக ரீதியிலான காஸ் சிலிண்டர், எவ்வித அரசு மானியமும் இன்றி சந்தை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பதிவு செய்யும் முறை இல்லை. முன்பதிவு செய்வதற்கான அவசியம் இல்லை. டிஜிட்டல் அங்கீகாரம் இல்லை. எந்தவொரு வணிக மற்றும் தனிநபர் சாதாரண நேரங்களில் அரசின் கட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்யும் இடத்தில் தேவையான அளவு சிலிண்டர்களை வாங்கலாம். இதனை ஒழுங்குபடுத்தவும், வெளிப்படையான முறையில் ஒதுக்கீடு செய்வதற்குமான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
இவ்வாறு ஹர்திப் சிங் புரி கூறினார்.
