வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்த போது, அமெரிக்காவின் கே.சி.-135 ரக வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளாகியதில், கீழே விழுந்து நொறுங்கியது. இதன்மூலம், இந்தப் போரில் அமெரிக்கா 4வது விமானத்தை இழந்துள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போர் 2 வாரங்களை எட்டியுள்ளது. இந்தப் போரில் கடுமையாக நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய தளங்கள் மற்றும் கப்பல்கள் சேதப்படுத்தப்பட்டன. இதற்கு, ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ஈராக்கின் மேற்கு பகுதியில் கே.சி.-135 ரக வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. மற்றொரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேற்கு ஈராக்கில் ஒரு விமானம் விழுந்து நொறுங்கியது. மற்றொரு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இந்த விபத்து எதிரிகளின் தாக்குதலாலோ அல்லது நட்பு நாட்டுப் படைகளின் தவறுதலான தாக்குதலாலோ ஏற்படவில்லை,’ என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது 4வது விமானத்தை இழந்துள்ளது. ஏற்கனவே, குவைத் படைகள் தவறுதலாக அமெரிக்காவின் 3 எப்-15இ ரக போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
