ஜெருசலேம்: ''ஈரானின் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனியின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது'' என இஸ்ரேல்

ஜெருசலேம்: ‘‘ஈரானின் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனியின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி இருப்பதாவது: ஈரானுக்கு எதிரான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு நடவடிக்கை எதிர்பார்த்ததை விட சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இஸ்ரேல் எப்போதையும் விட வலிமையாக உள்ளது.

ஈரானின் புதிய ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தபா கமேனியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஈரான் மக்கள் அந்த கொடுங்கோல் ஆட்சியை அகற்றுவதற்கான சூழலை உருவாக்குவதற்காகவே அமெரிக்காவும், இஸ்ரேலும் செயல்பட்டு வருகிறது.

ஈரானில் நாங்கள் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாசிஜ் (Basij) படைகள் மீது தெருக்களிலும், சோதனைச் சாவடிகளிலும் பலத்த தாக்குதல்களை நடத்தி வருகிறோம். மேலும் நாங்கள் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்.

ஈரான் மக்கள் சுதந்திரம் நோக்கிய ஒரு புதிய பாதையில் அடியெடுத்து வைப்பதற்கான அந்தத் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம், உங்களுக்கு உதவி வருகிறோம். ஆனால் இறுதியில் முடிவு எடுப்பது உங்கள் கைகளிலேயே உள்ளது.

அமெரிக்காவுடன் நாங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையிலான ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளோம். எங்கள் சிறந்த நண்பரும், எனது தனிப்பட்ட நண்பருமான அதிபர் டிரம்புடன் அமைந்த ஒரு கூட்டணி அது.

நாங்கள் ஏறக்குறைய தினமும் பேசிக்கொள்கிறோம். நாங்கள் வெளிப்படையாகப் பேசுகிறோம்; கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பரிமாறிக்கொள்கிறோம்; இணைந்து முடிவுகளை எடுக்கிறோம். இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் கூறினார்.

ஆட்சி மாற்றம் வருமா?

ஈரானில் இஸ்ரேல் ஒரு ஆட்சி மாற்றத்தை முன்னெடுக்குமா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பதில்: ஒருவரை நீங்கள் நீர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லலாம்; ஆனால் அவரை நீர் அருந்தும்படி கட்டாயப்படுத்த முடியாது.
மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவதற்குத் தேவையான முயற்சிகளை மே றகொண்டோம்.

வான்வழித் தாக்குதல்கள் உள்ளிட்ட, இதற்கு உகந்த மிகச்சிறந்த சூழல்களை நாங்கள் உருவாக்குவோம். தற்போதைய ஆட்சியை வலுக்கட்டாயமாக அகற்றுவதற்காக படைகளை களமிறக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம்” என பதில் அளித்தார்.

Source link