கோக்ரஜார்: காங்கிரஸ் செய்த பாவத்தால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அசாமில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்துக்கு சென்ற பிரதமர் மோடி கூட்டம் ஒன்றில் பேசியதாவது: போடோலாந்து மக்களை பல தலைமுறைகளாக மாயக்கனவுகளில் காங்கிரஸ் சிக்க வைத்தது. தனது சுயநல அரசியலுக்காக பல்வேறு சமூகங்களுக்கு இடையே காங்கிரஸ் பிளவை விதைத்தது. ஆனால், அமைதியை நிலைநாட்ட பாஜ பணியாற்றியது. இதன் காரணமாக போடோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
முதல்முறையாக இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, அனைத்து முக்கிய அமைப்புகளும், குழுக்களும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்துள்ளன.பொய் வாக்குறுதிகளை விற்கும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் காங்கிரசிடம் எப்போதும் இருந்தது இல்லை.
காங்கிரஸ் கட்சி மற்றொரு பாவம் செய்துள்ளது. அதில் ஒன்று நாட்டுக்கும், அசாமின் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், மகள்கள் மற்றும் நிலம் ஆகியவற்றின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
ஊடுருவல்காரர்களுக்கு எப்போதும் அக்கட்சி ஆதரவு அளித்து வந்துள்ளது. பல தசாப்தங்களாக இப்பகுதியின் பூர்வகுடி மக்களுக்கு நிலம் குறித்த அடிப்படை சட்ட ஆவணங்களை காங்கிரஸ் வழங்க மறுத்துவந்ததுடன், பழங்குடியினரின் நிலங்களை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்தது. துப்ரி மற்றும் கோல்புரா பகுதிகளில் நிலைமை மோசமாக இருந்தது. இதனால், போடோலாந்து பகுதியில் மக்கள் தொகையில் சமநிலை சீர்குலைந்து பெரும் நெருக்கடி சூழ்நிலை ஏற்பட்டது. பாஜ அரசு, தற்போது ஊடுருவல்காரர்களிடம் இருந்து நிலங்களை பெற்று பூர்வகுடி மக்களிடம் ஒப்படைத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
