மதுரை : துாத்துக்குடி மாவட்டம், குளத்துார் அருகே மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், சி.பி.ஐ., விசாரணை கோரியதில்,

மதுரை : துாத்துக்குடி மாவட்டம், குளத்துார் அருகே மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், சி.பி.ஐ., விசாரணை கோரியதில், ‘வழக்கின் ஆவணங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்’ என, உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியது.

துாத்துக்குடி மாவட்டம், குமாரபுரம் வழக்கறிஞர் மாரீஸ்வரி தாக்கல் செய்த மனு: குளத்துார் அருகே ஒரு மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 472 மதிப்பெண் பெற்றார். அவர் மார்ச் 10ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பினார். அன்று இரவு இயற்கை உபாதையை போக்க வெளியில் சென்றார். வீடு திரும்பவில்லை. இரவு, குளத்துார் போலீசில், பெற்றோர் புகார் செய்தனர். நடவடிக்கை எடுக்காமல், விளாத்திகுளம் மகளிர் போலீசில் புகார் அளிக்கும்படி அலட்சியமாக தெரிவித்தனர். அங்கும் புகார் அளித்தனர். நடவடிக்கை இல்லை. மாணவியின் தந்தை ஆடு மேய்க்கும் வேலை செய்கிறார்.

அடுத்தகட்டமாக என்ன செய்வதென தெரியவில்லை. மார்ச் 11ல் அக்கிராமம் அருகே முட்புதரில் ஆடைகள் களையப்பட்டு, வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் மாணவி இறந்து கிடந்தார். ‘இதை பெரிதுபடுத்த வேண்டாம்’ என, பெற்றோரை, அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் முன்னிலையில் போலீசார் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கஞ்சாவிற்கு அடிமையான சிலர் சேர்ந்து, அம்மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்து, கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது. போலீசார் விசாரணையை துவங்குவதில் காலம் தாழ்த்தியதால், மாணவியின் உயிர் பறிபோனது. இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.

அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், ‘முதலில் சிறுமி மாயமானதாக வழக்கு பதியப்பட்டது. பின், கொலை வழக்காக மாற்றப்பட்டது. விளாத்திகுளம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை முடிந்துவிட்டது. ‘குற்றவாளிகளை கைது செய்ய, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணை துவக்க கட்டத்தில் உள்ளது. தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை’ என்றார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மாரீஸ்குமார், ‘சம்பவம் நடந்ததும் நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றவாளிகளை கைது செய்யவில்லை. விசாரணை சரியாக நடக்கவில்லை’ என்றார்.

நீதிபதிகள், ‘இவ்விவகாரத்தில் போராடுவோர், நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டும். அழுத்தத்தின் காரணமாக அவசரத்தில் யாரையாவது பிடித்து போலீசார் சிறையில் அடைத்துவிடுவர். விசாரணையை முறையாக நடத்த வேண்டும். டி.என்.ஏ., பரிசோதனை, கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். வழக்கு ஆவணங்களை மார்ச் 16ல் அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டனர்.

Source link