காபூல்: ஆப்கானிஸ்தானில், பயங்கரவாதிகள் மற்றும் தலிபான் ராணுவ நிலைகளை குறிவைத்து, பாக்., ராணுவம் விடிய விடிய வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான், அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் இடையே பல மாதங்களாக எல்லை தாண்டிய தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ஆப்கனுடன் நேரடி போர் துவங்கி விட்டதாக, பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், கந்தஹார், பக்டியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விடிய விடிய பாக்., விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. தெஹ்ரிக் – இ – தலிபான் பாக்., பயங்கரவாதிகள் மற்றும் தலிபானின் ராணுவ தலைமையகங்கள், ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில், 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும், தலிபான் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக பாக்., தெரிவித்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்த தலிபான் அரசு, பாக்., தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
