சசிகலாவின் அழைப்பை நிராகரித்த ராமதாஸ்

சசிகலாவின் கூட்டணி அழைப்பை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நிராகரித்ததாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:

பா.ம.க., தலைவர் அன்புமணி இருப்பதால் அ.தி.மு.க., கூட்டணியிலும்; விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பால் தி.மு.க., கூட்டணியிலும், ராமதாசால் சேர முடியவில்லை.

இந்நிலையில், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவக்கியுள்ள சசிகலா, கடந்த 11ம் தேதி திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்து பேசினார்.

அப்போது ராமதாசிடம், ‘உங்களுக்கு அன்பு மணியை தோற்கடிக்க வேண்டும். எனக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை தோற்கடிக்க வேண்டும். எனவே, இருவரும் கூட்டணி அமைத்து, சிறிய கட்சிகளை அணி திரட்டுவோம். முடிந்தால் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்போம்’ என, கூறியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த ராமதாஸ், ‘பா.ம.க., பலமாக உள்ள வடக்கு, மேற்கு மாவட்டங்களில், உங்களுக்கு ஆதரவு இல்லை. உங்களுக்கு செல்வாக்குள்ள தென் மாவட்டங்களில், பா.ம.க.,வுக்கு ஆதரவு இல்லை. இருவரும் கூட்டணி வைத்தால், தென் மாவட்டங்களில் பா.ம.க.,வுக்கு ஓட்டு கிடைக்காது. எனவே, இக்கூட்டணி சரி வருமா என்பது சந்தேகம்தான். நிர்வாகிகளுடன் ஆலோசித்து சொல்கிறேன்’ என கூறியுள்ளார்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Source link