பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் ருத்ராட்சம் மற்றும் மாலைகள் விற்பனை செய்துகொண்டிருந்த மோனலிசா போஸ்லே புகைப்படம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து புகழ்பெற்றார். பின்னர் சினிமா வாய்ப்புகளும் வந்தன. மலையாள சினிமா உள்ளிட்ட பலமொழி சினிமாக்களில் நடித்தும் வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லேவும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த முஹம்மது ஃபர்மானும் காதலித்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். இஸ்லாமியரான முஹம்மது ஃபர்மானை திருமணம் செய்துகொள்ள பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங்கள் குல வழக்கப்படி வேறு கிராமத்தில் பெண்ணை திருமணம் செய்துகொடுப்பதில்லை என அவரது தந்தை தெரிவித்திருந்தார். தம்பானூர் காவல் நிலையத்தில் மோனலிசாவும் முஹம்மது ஃபர்மானும் தஞ்சம் அடைந்து புகார் அளித்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிப்பட்டது.

இவர்களது திருமணத்தில் சி.பி.எம் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கேரள அமைச்சர் சிவன்குட்டி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதற்கிடையே மோனலிசா போஸ்லேவுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை, அதையும் மீறி திருமணம் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது. பிரயாக்ராஜில் அவர் அளித்த பேட்டி உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி இந்த விவாரத்தை எழுப்பினர். சிலர் “திருமணம் செய்து வைக்க இடதுசாரியினரை அணுகவும்’ என்ற ரீதியிலும் கருத்துகளை பகிர்ந்தனர்.
