விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘சிறை’. ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் ‘சிறை’ படத்தின் 75-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம் நேற்று (மார்ச். 14) நடைபெற்றிருக்கிறது.
இதில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், ” இந்தப் படத்திலிருக்கும் உண்மை, அது கடத்த நினைக்கும் உணர்வு எல்லோருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என நினைக்கிறேன்.

இது தமிழின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். அதை சுரேஷ் ஒரு ஸ்க்ரிப்ட்டாக மாற்றி தன்னுடையதாக மாற்றும் பிராசஸ்ஸில் நிறைய சவால்கள் இருந்திருக்கும்.
அதை அவர் எதிர்கொண்டு படத்தை வெற்றியாக கொடுத்திருக்கிறார். இதில் தமிழ் எந்த இடத்திலும் தனக்கான அங்கீகாரத்தை கேட்காதது ஆச்சரியத்துக்கு உரியது.
ஒன்று வெற்றி அடைந்தால், இது என்னடையது என குறிப்பிடும் வழக்கம் இருக்கும். அதை எங்குமே தமிழ் கோரவில்லை. அதே சமயம் சுரேஷ் எந்த இடத்திலும் தமிழை விட்டுக் கொடுக்கவில்லை. அது அவர்களிடம் உள்ள சிறப்பு. ‘சிறை’ படத்தை தமிழ் மக்கள் பார்த்தவிதம் மிகவும் சிறப்பானது.

மற்ற மொழிகளில் ‘சிறை’ படம் வெளியாகி இருந்தால் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்குமா எனத் தெரியவில்லை. தமிழில் மட்டும்தான் இதுபோன்ற முயற்சிகளைத் தொடர்ந்து செய்கிறார்கள். நல்ல படங்களுக்கான சிறிய முயற்சிகளை மக்கள் அங்கீகரிக்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.
