முன்பு மிரட்டல்; இப்போ கெஞ்சல்; அமெரிக்காவை கேலி செய்யும் ஈரான்

டெஹ்ரான்: ‘ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் மாதக் கணக்கில் மிரட்டிக் கொண்டிருந்த அமெரிக்கா, தற்போது உலக நாடுகளிடம் கெஞ்சுகிறது’ என, ஈரான் கேலி செய்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தொடங்கிய போர் 15 நாட்களைக் கடந்துள்ளது. இதற்கு பதிலடியாக மேற்காசியவில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்கிய ஈரான், உலக எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியது.

இதனால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, உலக கச்சா எண்ணெய் சந்தையில் நிலையற்ற தன்மையும், விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு, 30 நாட்கள் தற்காலிக விலக்கு அளித்த அமெரிக்கா, ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்க அனுமதித்துள்ளது. மேலும் பிற நாடுகளையும் ரஷ்யாவின் எண்ணெயை வாங்க வலியுறுத்தி உள்ளது.

இதனை ஈரான் கடுமையாக விமர்சித்து கேலி செய்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:அமெரிக்கா முன்பு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளை, குறிப்பாக இந்தியாவிற்கு கடுமையாக அழுத்தம் கொடுத்து தடை செய்ய முயன்றது.

இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து, ரஷ்ய எண்ணெய் கொள்முதலை குறைக்க வற்புறுத்தியது. ஆனால், தற்போது போர் காரணமாக எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில், அமெரிக்கா திடீரென தன் கொள்கையை மாற்றியுள்ளது.

இது அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக பார்க்கப்படுகிறது. முன்பு ரஷ்யாவை தண்டிக்கும் நோக்கில் எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய முயன்ற அமெரிக்கா, தற்போது ஈரான் மீதான மோதல் காரணமாக அதே ரஷ்ய எண்ணெயை ஊக்குவிப்பது முரண்பாடாக உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Source link