வாஷிங்டன்: ஈரானின் புதிய உச்ச தலைவர் உட்பட, 10 முக்கிய தலைவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு, 100 கோடி ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு படைகள் பிப்., 28ல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு பின் ஈரான் அரசு வலுவிழக்கும் என நம்பப்பட்டது.
ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் தொடர்ந்து பதிலடி தந்து வருகிறது. புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கால் இழந்து கோமாவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரானின் இஸ்லாமிய குடியரசைச் சேர்ந்த அனைத்து முக்கிய தலைவர்களையும் தீர்த்துக்கட்ட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உச்ச தலைவர் மொஜ்தபா உட்பட, 10 பேரின் பெயர்களை வெளியிட்டு அவர்கள் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 100 கோடி ரூபாய் வெகுமதி மற்றும் மாற்றிடம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சம், ‘நீதிக்கான வெகுமதி’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரானின் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி மற்றும் புரட்சிகர ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் உலகளவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றனர்.
இவர்கள் குறித்து எங்களுக்கு தகவல் அனுப்புங்கள்; 100 கோடி ரூபாய் வரை வெகுமதி பெறுங்கள், புதிய நாட்டுக்கும் இடம்பெயரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
