தேவகோட்டை: ”ஒரு சதவீத ஓட்டு வைத்திருப்பவர்கள் சீட்டு, நோட்டு பேரம் பேசி கூட்டணி வைக்கின்றனர். 36 லட்சம் ஓட்டு வைத்திருக்கும் எங்களுடன் கோடியில் பணம், சீட்டு பேரம் பேசிய பின்பும் சமரசம் செய்யவில்லை. உண்மையான நல்லாட்சி அமைக்க வேணடும் என்பது எங்கள் பெருங்கனவு,” என, தேவகோட்டையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
சட்டசபை தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ள சீமான், தேவகோட்டை பள்ளிவாசலில் நேற்று ஜமாத்தாரிடம் ஆதரவு திரட்டினார். நகர ஜமாத் நிர்வாகிகள் சீமானுக்கு சால்வை அணிவித்தனர். பின் சீமான் பேசியதாவது: அநீதிகளை எதிர்த்து உங்கள் பிள்ளைகளாக போராடுகிறோம். மக்களுடன் மக்களாக நின்றோம். மக்கள் தங்களுடன் நின்று போராடுபவர்கள் பக்கம் நிற்காமல் பிரச்னையை தந்தவர்கள் பக்கம் நிற்பது தான் பெரும் துயரம்.
நாங்கள் தலைவர்களின் வாரிசுகளோ, பெரிய பொருளாதார பின்னணி உள்ளவர்களோ, சினிமா புகழ் பெற்றவர்களோ, ஊடகங்கள் ஆதரிக்கும் செல்வாக்கு பெற்றவர்களோ இல்லை.விவசாயிகள், மீனவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் வீதியில் போராடுகின்றனர். பிரச்னையை தந்தவர்கள் ஒருபுறமும், பிரச்னையை தீர்க்க வந்த நாங்கள் ஒரு பக்கமும் நிற்கிறோம்.
நம்மை அடிமைகளாக வைத்திருக்கவே ஆட்சி அதிகாரம் நிறுவப்பட்டிருக்கிறது.இங்கு ஆள் மாறுகிறார், ஆட்சி மாறுகிறது, ஆனால் ஆட்சி முறை மாறவில்லை. லஞ்சம், மதுக்கடைகள் என மாறி மாறி வருகிறது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் நீர்வளம் இல்லை என அறிவிக்கின்றனர். இதை அறிவிப்பது தான் அரசின் வேலையா. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போது லஞ்ச ஊழலும் விதைக்கப்படுகிறது.
ரூ.30 கோடி செலவழித்து வெற்றி பெறுபவர் ரூ.300 கோடிக்கு ஆசைப்படுவார். எனக்கு ஓட்டு போடுங்கள் என கேட்கவில்லை. உங்கள் பிள்ளை சீமான் வெல்லட்டும் என அல்லாவிடம் ஒரு நிமிடம் துவா செய்யுங்கள் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.
