'உலக' கால்பந்து: ஈரான் சவால்

ஜெனிவா: ‘உலக கோப்பை கால்பந்து தொடரில் இருந்து யாராலும் எங்களை வெளியேற்ற முடியாது,’ என ஈரான் தெரிவித்துள்ளது.

‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், வரும் ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. 48 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆசியாவின் பலம் வாய்ந்த ஈரான் (‘நம்பர்-20’) அணி ‘ஜி’ பிரிவில் உள்ளது. நியூசிலாந்து (ஜூன் 15), பெல்ஜியம் (21), எகிப்துடன் (26), ஈரான் மோத உள்ள போட்டிகள் அமெரிக்காவில் நடக்க உள்ளன. ஆனால், அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்ததால், குழப்பமான சூழல் நிலவுகிறது.

இருப்பினும் ‘ஈரான் அணி, அமெரிக்கா வந்து விளையாடலாம்,’ என, அதிபர் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்தார். ஆனால்,” எங்கள் தலைவர், பள்ளி மாணவர்களை கொலை செய்துள்ளனர். அமெரிக்காவில் நடக்கும் உலக கால்பந்து தொடரில் எங்களால் பங்கேற்க முடியாது,” என ஈரான் தெரிவித்தது.

திடீர் மாற்றம்

இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில்,” அமெரிக்க மண்ணில் ஈரான் அணி வீரர்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தர முடியாது,” என்றார்.

தற்போது, ஈரான் அணியும், தனது முடிவை மாற்றிக் கொண்டு, உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஈரான் தரப்பில் வெளியான செய்தி:

உலக கோப்பை கால்பந்து தொடர் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. சர்வதேச அளவிலான இத்தொடரை ‘பிபா’ நடத்துகிறது. வேறு எந்த தனி நாடு அல்லது தனிநபர் நடத்தவில்லை. இத்தொடரில் இருந்து எங்களை யாராலும் வெளியேற்ற முடியாது. இதுபோன்ற முக்கியமான உலக தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவிக்கும், போட்டியை நடத்தும் அணியைத் தான் தொடரில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link