சென்னை: மாணவர்களின் உயர் கல்வி, எதிர்கால தொழில் வாய்ப்புகள் குறித்து, வழிகாட்டுதல்களை வழங்கும், ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னையில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தங்களின் உயர் கல்வி மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் குறித்து தெளிவான வழிகாட்டுதலை பெறும் வகையில், ‘தினமலர்’ நாளிதழ் சார்பில், ‘வழிகாட்டி’ நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், வரும் 28, 29ம் தேதிகளில், காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, ‘தினமலர் வழிகாட்டி – 2026’ நிகழ்ச்சி நடக்கிறது.
மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் இந்த உன்னத நிகழ்ச்சி, மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பயனுள்ள தகவல்களை வழங்கும் சிறப்பு மேடையாக அமையும்.
நிகழ்ச்சியில், 100க்கும் அதிகமான கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், தங்கள் அரங்குகளை அமைத்து, மாணவர்களுக்கு படிப்பு, சேர்க்கை தொடர்பான தகவல்களை வழங்க உள்ளன. இதில், 20க்கும் மேலான துறை சார்ந்த நிபுணர்கள், கல்வியாளர்கள், மாணவர்களுக்கு நேரடியாக ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
நேரடி விளக்கம் ‘செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ., உலகை ஆளுமா, ஐ.டி., துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் அனைவருக்கும் ஏ.ஐ., அவசியமா, நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி’ என்பது போன்ற பல முக்கிய கேள்விகளுக்கு, நிபுணர்கள் நேரடி விளக்கம் அளிக்க உள்ளனர்.
மேலும், எதிர்காலத்துக்கு தேவையான திறன்கள் என்ன, உடனடி வேலை வாய்ப்புகளை வழங்கும் படிப்புகள் எவை, சி.ஏ., தேர்வில் வெற்றி பெறுவது எப்படி, கலை, சட்டம், அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்த உயர் கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு, நிபுணர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர்.
அதேபோல், துணை மருத்துவ படிப்புகளில் உள்ள வாய்ப்புகள், எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் துறைகள், சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது எப்படி, கல்லுாரிக்கு முக்கியத்துவம் தருவதா, படிப்புக்கு முக்கியத்துவம் தருவதா.
உதவித் தொகையுடன் உயர் கல்வி பெறுவது எப்படி, கல்விக்கடன் பெறும் நடைமுறைகள் போன்ற முக்கிய விஷயங்களையும், நிபுணர்கள் விளக்க உள்ளனர்.
கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில், ஏ.ஐ., ரோபோடிக்ஸ், ஏ.ஆர்., – வி.ஆர்., போன்ற நவீன தொழில்நுட்ப கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ‘லேப்டாப், டேப், ஸ்மார்ட் வாட்ச்’ ஆகியவை பரிசாக பெறும் வாய்ப்புகளும் உள்ளன.
இந்த வழிகாட்டி நிகழ்ச்சியை, ‘தினமலர்’ நாளிதழுடன், ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், அம்ரிதா விஸ்வா வித்யாலயா ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.
உயர் கல்வி மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் குறித்து, தெளிவான வழிகாட்டுதலை பெற விரும்பும் மாணவர்களும், பெற்றோரும், இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெறலாம்.
