காரைக்குடி: தவெக தலைவர் விஜய் ஆட்சியில் பங்கு என சொன்னாலும் தனித்து விடப்பட்டார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: விஜய் தனித்து நிற்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என எல்லாரையும் அழைத்துப் பார்த்தார். யாரும் கூட்டணிக்கு வராததால் தனித்து விடப்பட்டார். அதனால் தனித்து நிற்கிறார். நான் 2010ல் கட்சி தொடங்கும் போது, இந்திய கட்சிகள், திராவிட கட்சிகளுடன் கூட்டு இல்லை. தேர்தல் உடன்பாடு இல்லை என அறிவித்தேன். இன்று வரை தனித்து நிற்கிறேன். நான் யாரிடமாவது பேசினேனா? என்னை அழைத்தார்கள்.
யாருடையாவது போனேனா? எனக்கு பேசாத பேரம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா? எவ்வளவு கோடிகள், பதவிகள் தரப்படும் என பேசப்பட்டு இருக்கும் நான் போனேனா என்று பாருங்கள், விஜய் வரும் போதே கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு என்று சொல்லிவிட்டார். ரொம்ப நாள் காத்து இருந்தீர்கள். காங்கிரஸ் உட்பட பல கட்சிகளை எதிர்பார்த்து இருந்தீர்கள். யாரும் வரவில்லை. கூட்டத்தோடு நிற்க யாருக்கும் வீரமோ, துணிவோ, தேவையில்லை. நாங்கள் வீரர்கள் தனித்து நிற்கிறோம். நாங்கள் மக்களை முழுமையாக நம்புகிறோம் .அவர்கள் கட்சியையும் ,தலைவர்களையும் நம்புகிறார்கள்.
எங்களுடைய கட்சி தனித்துவமானது. அதனால் தனித்து நிற்கிறோம். எங்களோடு ஒருபோதும் தவெகவை ஒப்பிட்டுப் பேச கூடாது.
காளியம்மாள் நம்முடைய தங்கை, நாங்கள் வளர்த்த பிள்ளை, எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். நன்றாக இருக்க வேண்டும். என்னுடைய தங்கைக்கு வாழ்த்துக்கள். 2010ல் அதிமுகவில் மகளிர் பொறுப்பிலிருந்தேன் என்கிறார். அங்கு இருந்து தான் நாம் தமிழர் கட்சிக்கு வந்துள்ளார். திடீரென அதிமுகவில் இணைந்ததுக்கு வந்த மனமாற்றம் குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.
