புதுடில்லி: தமிழகத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

புதுடில்லி: தமிழகத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது; தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்த போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். 5 மாநில அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டோம். இந்த 5 மாநிலங்களும் கலாசாரம் மற்றும் ஜனநாயகத்தில் சிறந்து விளங்குபவை.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, நியமிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு நடக்கும் தேர்தல் இது. தகுதியில்லாத ஒரு நபர் கூட வாக்களிக்க முடியாது. 5 மாநிலங்களில் சேர்த்து மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும், பெண் வாக்காளர்கள் 2,89,69,838 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேரும் உள்ளனர். முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர்.

5 மாநிலங்களில் 2.19 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும். சராசரியாக 700 பேருக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்படும். தமிழகத்தில் 75,032 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. நகர்ப்புறங்களில் 30,967 ஓட்டுச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 44,065 ஓட்டுச்சாவடிகளும் உள்ளன. தேனி மாவட்டம் வருஷநாடு வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்பட உள்ளது. தேர்தல் பணிக்காக 1,444 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மொத்தம் 25 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இந்தத் தேர்தலுக்காக மொத்தம் 8.50 லட்சம் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஓட்டுச்சாவடி மையங்கள் 100 சதவீதம் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

5 மாநிலங்களிலும் 824 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். முதல்முறையாக வாக்களிப்பவர்களை வரவேற்கிறோம். ஒவ்வொரு வாக்காளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தயாராக உள்ளோம். ஓட்டுச்சாவடி மையங்களில் செல்போன்களை பத்திரமாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

Source link