சென்னை: இளம் டாக்டர்களின் எதிர்காலத்தில், தி.மு.க., அரசு விளையாடுவதாக, தமிழக பா.ஜ, முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில் 1,100 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, கடந்த ஜன.,25ல் நடந்தது. தேர்வு முடிவுகள் வெளியாகி, 1,927 டாக்டர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு பணி, பிப்.,25, 26ம் தேதிகளில் நடந்து, உத்தேசப் பட்டியல், மார்ச் 11ல் வெளியிடப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாமல், 100 டாக்டர்களை மட்டும், தொலைபேசி வழியாக, கவுன்சிலிங்குக்கு அழைத்ததாக புகார் எழுந்துள்ளது. அது மட்டுமின்றி, மொத்தப் பணியிடங்கள் 1,110ல் இருந்து 320 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அரசு பணிக்காக தேர்வெழுதி காத்திருந்த இளம் டாக்டர்கள், மன அழுத்தத்தில் உள்ளனர். இளம் டாக்டர்கள் எதிர்காலத்தில் தி.மு.க., அரசு விளையாட வேண்டாம். லஞ்சம் வாங்கிக் கொண்டு, அரசுப்பணி வழங்கும் வரலாறு கொண்ட தி.மு.க., அரசு, டாக்டர் பணியிடங்களிலும், அதே வேலையை காட்டியுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.
எந்த வெளிப்படைத்தன்மையும் இன்றி, தொலைபேசி வாயிலாக, கவுன்சிலிங்கிற்கு அழைப்பது, அரசுப்பணி தேர்வு நடைமுறைகளை கேள்விக்குறியாக்குகிறது. உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கான, உண்மையான காலியிடங்கள் மற்றும் தேர்வு பெற்ற மருத்துவர் பட்டியலை உடனே வெளியிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
