சென்னை: சிறுபான்மையினர் மீது வெறுப்பை தூண்டிவிட்டு பாஜ குளிர்காய்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;
திமுகவிற்கும், இஸ்லாமியர்களுக்கும் இருக்கக்கூடிய உறவு இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. இந்த இயக்கம் தொடங்கினது முதல் உண்டானது உண்டு. தலைமுறை கடந்து தொடரக்கூடிய உறவு. அதன் தொடர்ச்சியாக தான் கடந்தாண்டு விழாவில் பேசும் போது நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்று பேசினேன்.
உங்களுக்கான பல நலத்திட்டங்களை கருணாநிதி காலத்தில் அவர் கொண்டு வந்திருக்கிறார். அவரின் வழியில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியில், இஸ்லாமியர்களுக்கான செய்த திட்டங்கள் பல. உங்களுக்கு எப்போது எல்லாம் என்ன தேவைப்பட்டாலும் அதை அறிவித்து, செயல்படுத்துவது தான் திமுகவின் ஆட்சி.
நமது பலமே பெண்கள்தான். மகளிர் நலன்களை முன்வைத்து தான் நாம் ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பெண்கள் நம்முடன் இருக்கும் போது நம்மை யாராலும் வீழ்த்தமுடியாது. அனைத்து சிறுபான்மை இயக்கங்களும் ஒன்றிணைந்துள்ளன. இந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியதுதான் திமுக.
இந்த ஒருங்கிணைப்புதான் தமிழகத்திற்கு அவசியம். ஏன் இந்திய நாட்டுக்கும் அவசியம். ஆனால், இதற்கு நேர்மாறான நிலைதான் பாஜ ஆளும் மாநிலங்களில் இருக்கிறது. இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, கிறிஸ்துவர்களாலும் பண்டிகையை கொண்டாட முடியவில்லை. நாடு முழுவதும் நடக்கக்கூடிய சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகளை பற்றி இன்றைக்கு இருக்கும் எதிர்க்கட்சித்தலைவர் இபிஎஸ் ஏதேனும் கருத்து சொன்னாரா? இல்லை.
அவரிடம் நாம் கேட்பது எல்லாம்… அதிமுக என்ற கட்சியோடு சேர்த்து, உங்களின் மனசாட்சியையும் பாஜவிடம் அடகு வைத்துவிட்டீர்களா என்பதுதான். சிறுபான்மையினர் மீதான வெறுப்பை, அந்த நெருப்பை தூண்டிவிட்டு, அதில் குளிர்காயக்கூடிய பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். பின்னர் எப்படி அவர்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் நிலைநாட்டுவீர்கள்.
இபிஎஸ் மட்டுமல்ல… நாட்டில் பலரும் நோன்பு திறக்கும் ஒருநாளில் மட்டும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கின்றனர். இப்படி ஓடி ஒளிந்து கொள்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்த போதும் சரி… இப்போது ஆட்சியில் இருக்கும் போதும் சரி, முதல் ஆளாக குரல் கொடுப்பது திமுகதான்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
