சென்னை: ”ஹிந்து சமயத்தை கேலி, கிண்டல் செய்யும், அமைச்சர் பொன்முடி போன்ற நாத்திகர்களுக்கு, ஆன்மிகவாதிகள் ஓட்டளிக்காமல், வரும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்,” என, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
ஹிந்து மக்கள் கட்சி சார்பில், ‘தமிழ் தமிழர் தமிழகம் மீட்பு’ மாநில மாநாடு, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்தது. மாநாட்டில், காமாட்சிபுரம் ஆதீனம், மன்னார்குடி ஜீயர், அண்ணாமலை சித்தர், திருவண்ணாமலை சுவாமி வெற்றி விஜயானந்தபுரி உள்ளிட்ட மடாதிபதிகள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு ஆசி வழங்கினர்.
மாநாட்டில், அர்ஜுன் சம்பத் பேசியதாவது: ஹிந்துக்களின் ஓட்டுகள், ஜாதி மத அடிப்படையிலும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வாயிலாகவும் சிதறடிக்கப்படுகிறது. இதை களைய, ஹிந்து ஓட்டு வங்கியை உருவாக்க வேண்டும்.
அதேபோல், ஹிந்து சமயத்தை கேலி, கிண்டல் செய்யும், அமைச்சர் பொன்முடி போன்ற நாத்திகர்களுக்கு, ஆன்மிகவாதிகள் ஓட்டளிக்கக்கூடாது. அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்தில் மட்டும் தான், ஹிந்து கோவில்கள் அரசு மற்றும் அரசியல்வாதிகள் பிடியில் உள்ளது. இதற்கு எதிராக, அறப்பணியில் ஈடுபடுவோர் அடங்கிய வாரியம் அமைக்கப்பட்டு, ஹிந்து கோவில்களும் சொத்துக்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதேபோல், முஸ்லிம்களுக்கு மதரசா கல்வி, கிறிஸ்தவர்களுக்கு பைபிள் கல்வி உள்ளதை போல், தமிழர்களுக்கு, ஹிந்து சமய கல்வியை அரசு வழங்க வேண்டும். மேலும், ஹஜ் புனித யாத்திரை செல்லும் முஸ்லிம்களுக்கும்; ஜெருசலேம் செல்லும் கிறிஸ்துவர்களுக்கும் வழங்கப்படுவதை போல், காசி, ராமேஸ்வரம், ஐயப்பன் கோவில்களுக்கு புனித யாத்திரை செல்லும் ஹிந்துக்களுக்கும், அரசு நலத் திட்டங்களையும் வழங்க வேண்டும்.
விஜய், சீமான் உள்ளிட்டோர், தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என சொல்லி, மறைமுகமாக அ.தி.மு.க., – பா.ஜ., ஓட்டுகளை பிரிக்கப் பார்க்கின்றனர். இவர்கள் தி.மு.க.,வின் ‘டூல் கிட்டாக’ செயல்படும் அவர்களின் சதி திட்டத்தை முறியடிக்க வேண்டும்; உஷாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
