எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை சிறப்பாக கையாண்ட சபாநாயகர்; பிரதமர் மோடி பாராட்டு

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பின் போது சிறப்பாக செயல்பட்டதாகக் கூறி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை, பிரதமர் மோடி பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த வாரம் லோக்சபா சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். பெரும் விவாதத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லாவை பாராட்டி பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது; நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பின் போது, நீங்கள் (ஓம் பிர்லா) காட்டிய பொறுமையும், நடுநிலைமையும் பாராட்டுக்குரியது. இந்த நடவடிக்கைகள் அவையில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கியுள்ளது. வாரிசு அரசியல் மற்றும் மன்னராட்சி மனநிலை கொண்டவர்கள், ஜனநாயக அமைப்புகளை குறுகிய வட்டத்திற்குள் சுருக்க முயற்சிக்கின்றனர். ஆரோக்கியமான விவாதம் மற்றும் ஆலோசனைகள் இருக்கும் பார்லியில், நாட்டின் அனைத்துப் பகுதிகளின் குரல்களும் ஓங்கி ஒலிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் இந்தக் கடிதத்திற்கு பதிலளித்த ஓம் பிர்லா, பார்லியின் ஜனநாயக விதிகள் மற்றும் மரபுகள் மீது பிரதமர் மோடி வைத்துள்ள ஆழமான நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும், பார்லியில் எம்பிக்களின் ஒழுங்கீனமான நடத்தையைக் கட்டுப்படுத்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார்.

Source link