அர்ச்சகர்களுக்கு ஊதிய உயர்வு கடைசி நேரத்தில் அறிவித்தார் மம்தா

கொல்கட்டா: சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், அர்ச்சகர்களுக்கு கவுரவ ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கப்படும் போன்ற அதிரடி அறிவிப்பு களை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதன்படி, 152 தொகுதிகளுக்கு ஏப்., 23லும், 142 தொகுதிகளுக்கு ஏப்., 29லும் தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மே 4ல் நடக்கிறது.

இது தொடர்பான கால அட்டவணையை, தேர்தல் கமிஷன் நேற்று மாலை 4:00 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்தது. இதற்கு சில மணி நேரங்களுக்கு முன், முதல்வர் மம்தா பானர்ஜி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:

மேற்கு வங்கத்தில் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் மசூதிகளில் பணிபுரியும் இமாம்களின் மாதாந்திர கவுரவ ஊதியம், 500 ரூபாய் அதிகரிக்கப்படுகிறது.

இதன் மூலம் அவர்கள் இனி மாதம், 2,000 ரூபாய் பெறுவர். கவுரவ ஊதியம் வேண்டி விண்ணப்பித்த அர்ச்சகர்கள் மற்றும் இமாம்களின் அனைத்து புதிய விண்ணப்பங்களுக்கும் உடனடியாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகவிலைப்படி நிலுவை

அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்கக் கோரி, மேற்கு வங்க அரசு ஊழியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வரும் 31க்குள் அகவிலைப்படி நிலுவைத் தொகையில், 25 சதவீதத்தை வழங்க உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில், அகவிலைப்படி நிலுவைத்தொகை இம்மாதம் முதல் வழங்கப்படும் என, முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அறிவித்துள்ளார்.

விதிமீறல் இல்லை

இதன் மூலம், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் தொழிலாளர்கள் பயனடைவர் என, மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால், அதற்கு முன்பாகவே, அர்ச்சகர்களுக்கு கவுரவ ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கப்படும் போன்ற அறிவிப்புகளை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டார். இது, தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை என, தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.

Source link