அ.தி.மு.க., ஆட்சி அமைக்க உதவுங்கள்: முஸ்லிம்களிடம் பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: “அ.தி.மு.க., ஆட்சி அமைக்க, சிறுபான்மையினர் உதவ வேண்டும்,” என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

அ.தி.மு.க., சார்பில், சென்னை எழும்பூரில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், த.மா.கா., தலைவர் வாசன் உள்ளிட்ட தே.ஜ., கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பழனிசாமி பேசியதாவது: என் ஆட்சி, சிறுபான்மை மக்களுக்கு பொற்காலம். முஸ்லிம் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தேன். எந்த சூழலிலும் மதசார்பின்மை, சமூக நல்லிணக்கம் ஆகிய கொள்கையில் இருந்து, அணு அளவும் மாற மாட்டேன். முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை, தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் காப்பாற்றுவது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளன.

ஆனால், கண்ணை இமை காப்பதுபோல், அ.தி.மு.க., தான் உங்களை பாதுகாக்கிறது. எனவே, அ.தி.மு.க., ஆட்சி அமைக்க, சிறுபான்மையினர் உதவ வேண்டும். லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடும் தி.மு.க., ஆட்சியை அகற்றுவது ஒவ்வொருவரின் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.

விஜயுடன் கூட்டணி பேசவில்லை!

சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய 15 நாட்கள் உள்ளன. விரைவில், கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து, தொகுதி பங்கீடு செய்வோம். தி.மு.க.,வின் கவர்ச்சி பேச்சு தேர்தலில் எடுபடாது. எங்கள் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன. த.வெ.க., தலைவர் விஜயுடன், இதுவரை நாங்கள் கூட்டணி பேசவில்லை.
– பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,

Source link