அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்: விஜயை சாடியை வைகோ

மதுரை: அரசியல் தலைவர்களுக்கு குடும்பம், ஒழுக்கம் முக்கியம், என, மதுரையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ சாடினார்.

மத்திய அரசு மற்றும் காஸ் தட்டுப்பாட்டை கண்டித்து தி.மு.க., கூட்டணிக்கட்சிகள் சார்பில் மதுரையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வைகோ பேசியதாவது: காஸ் தட்டுப்பாடு பிரச்னையால் வீட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் முதல் சிறு ஓட்டல்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். வீடுகளில் இனி அடுப்பு எரியுமா என்ற கவலை பல குடும்பங்களில் உருவாகியுள்ளது.

விலை உயர்வால் ஒரு இட்லிக்கும், ஒரு மெது வடைக்கும் ரூ.33.33 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.,யை தாண்டி கூடுதலாக காஸ் கட்டண உயர்வாக ரூ.9.52 வசூலிக்கும் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.

அடகு வைத்துள்ளனர்

உலகளாவிய அரசியல், போர்ச்சூழல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா, அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்றுள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் பாதுகாப்பாக திரும்புவார்களா என்ற அச்சத்தில் இங்குள்ள குடும்பங்கள் உள்ளன. போருக்கு காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப். அவர் மீது அந்நாட்டு அரசியல் கட்சிகள் ‘இம்பீச்மென்ட்’ கொண்டுவர உள்ளன. அதேநேரம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்திய பிரதமர் மோடி, 120 கோடி இந்திய மக்களின் தன்மானத்தை அடகு வைத்து விட்டார்.

‘ஆணும், பெண்ணும் எப்படியும் வாழலாம்’ என்ற மேற்கத்திய கலாசாரம் கொண்ட அமெரிக்காவில் கூட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தங்கள் குடும்ப வாழ்க்கை, ஒழுக்கத்தை ஒரு தகுதியாக முன்வைக்கின்றனர். ஆனால் பலஆயிரம் ஆண்டுகளாக ஒழுக்கத்தை கடைபிடிக்கும் நம் சமூகத்தில், அரசியலுக்கு புதிதாக வந்தவர் ‘எப்படியும் வாழ்க்கை நடத்துவேன், யாரோடும் கைபிடித்து செல்வேன்’ என சொல்லக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

தலைவர்களுக்கு குடும்பம், ஒழுக்கம் முக்கியம். மாயாஜால காட்சிகளுக்கு உங்கள் வீட்டு பிள்ளைகளை பலியாக்கி விட வேண்டாம். இவ்வாறு பேசினார்.

Source link