நமது நிருபர்
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த சிறிது நேரத்திலேயே, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி மற்றும் உள்துறை செயலாளர் ஜகதீஷ் பிரசாத் மீனா ஆகியோரை அந்த பொறுப்பில் இருந்து இந்திய தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்திற்கு வரும் ஏப்ரல் 23 மற்றும் 29ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், பதிவாகும் ஓட்டுகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. மேற்கு வங்க தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி மற்றும் உள்துறை செயலாளர் ஜகதீஷ் பிரசாத் மீனா ஆகியோரை இந்திய தேர்தல் கமிஷன் அந்த பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளது.
தலைமைச் செயலாளர் சக்ரவர்த்திக்குப் பதிலாக துஷ்யந்த் நரியாலா நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் சங்கமித்ரா கோஷ் புதிய உள்துறைச் செயலாளராகப் பொறுப்பேற்பார். தற்போது பணி நீக்கம் செய்யப்பட்ட நந்தினி சக்ரவர்த்தி, ஜகதீஷ் பிரசாத் மீனா தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தப் பதவிகளிலும் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
