நமது நிருபர்
பிளஸ் 2 மாணவி வழக்கில் பெற்றோர் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யத் தவறிய சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் ,எஸ்.ஐ. மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, மார்ச், 10ல் திடீரென மாயமானார். மறுநாள் அங்குள்ள காட்டுப் பகுதியில், ஆடைகள் களைந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். குளத்துார் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்தனர். கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில் சி.பி.ஐ .,விசாரணைக்கு உத்தரவிட ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கறிஞர் மாரீஸ்வரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று (மார்ச் 16) ஐகோர்ட் கிளை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ”முதலில் மாணவி மாயமானதாக வழக்கு பதியப்பட்டது. தற்போது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரின் டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையை எஸ்.பி .கண்காணித்து வருகிறார்” என விளக்கம் அளிக்கப்பட்டது. பிறகு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:
* இந்த வழக்கை விளாத்திகுளம் டி.எஸ்.பி , விசாரிக்க வேண்டும். இறந்த மாணவியனுடைய பெற்றோரின் வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவில் பதிவு செய்ய வேண்டும்.
* இதுவரை மேற்கொண்ட விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பெற்றோர் முதலில் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யத் தவறிய சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
