பார்லி.,யில், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் இறங்கி ரகளையில் ஈடுபட்டதை அடுத்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பேச, லோக்சபாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியால் திட்டமிட்டபடி வர முடியவில்லை.
லோக்சபா காலையில் கூடியதுமே, ‘ஜனாதிபதி உரை மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை பேச அனுமதிக்க வேண்டும்’ என வலியுறுத்தி, காங்., – எம்.பி.,க்கள் கடும் அமளியில் இறங்கியதால், கேள்வி நேர அலுவல்கள் ரத்து செய்யப்பட்டு, உடனடியாக சபை ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் 12:00 மணிக்கு சபை கூடிய போது, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் அறிக்கை தாக்கல் செய்து பேச முயன்றார். அப்போதும் கடும் அமளி ஏற்படவே, சபை ஒத்தி வைக்கப்பட்டது.
மதியம் 2:00 மணிக்கு மீண்டும் கூடியும் அலுவல்களை மேற்கொள்ள முடியாமல் சபை ஒத்தி வைக்கப்பட்டது. ஏற்கனவே அறிவித்தபடி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து, பிரதமர் மோடி பேசுவார் என்ற எதிர்பார்ப்பில், மாலை 5:00 மணிக்கு சபை கூடியது.
ஆனால், அதுவும் நடக்காததால், லோக்சபா நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது.
பிரமாண்ட பேனர்களை சபைக்குள் எடுத்து வந்து, அவற்றை உயர்த்திப் பிடித்து, காலை முதலே காங்., – எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டபடியே இருந்தனர்.
சபாநாயகர் இருக்கை, மத்திய அமைச்சர்கள் அமரும் இடம் என, அனைத்தையும் மறைத்தபடி நின்றனர். சபையின் மையப் பகுதியை முற்றுகையிட்ட அவர்கள், ‘ராகுலை பேச விடாமல் தடுத்ததை ஏற்க முடியாது. அவரை பேச விடாமல் சபையை நடத்த விட மாட்டோம்’ என, முழக்கமிட்டனர்.
மேலும், பிரதமர் மோடி, ராணுவ முன்னாள் தளபதி நரவனே, எப்ஸ்டீன் ஆகியோரது புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களையும் ஏந்தியபடி கூச்சலிட்டனர். மேலும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.பி.,க்கள், பிரதமர் மோடியின் இருக்கையை முற்றுகையிட்டு, காலை முதலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி உரை நிகழ்த்தும் போது, எதிர்க்கட்சி எம்.பி.,க்களால் சபைக்குள் அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்ற அச்சமும், பரபரப்பும் நிலவியது. அனைத்து நிலவரங்களை கருதியே, வேறு வழியின்றி சபை முழுதுமாக ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. லோக்சபாவில் பிரதமர் மோடி இன்று பதிலுரை அளிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
– நமது டில்லி நிருபர் -:
