புதுடில்லி: போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பற்றாக்குறை எங்கம் ஏற்படவில்லை என விளக்கமளித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அப்பகுதியில் நிலவும் சூழ்நிலை, இந்தியர்கள் பாதுகாப்பு, கச்சா எண்ணெய் விநியோகம் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மார்ச் 16ம் தேதி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை கூடுதல் செயலாளர் சுஜாதா ஷர்மா கூறியதாவது: போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களிலும் உச்சபட்ட திறனுடன் செயல்பட்டு வருகின்றன. பெட்ரோல் பம்புகள் வழக்கம்போல் செயல்படுகின்றன. எங்குள் எரிபொருள் தீர்ந்து போனதாக தகவல் இல்லை என்றார்.
கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் ராஜேஷ் குமார் சின்ஹா கூறியதாவது: பெர்சியன் வளைகுடாவில் இருந்து கிளம்பிய சிவாலிங் எல்பிஜி கப்பல், ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளது. இது இந்தியா நோக்கி வந்து கொண்டுள்ளது. இதுதுறைமுகம் வந்து சேர்வதற்கு முன்னர், அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்பட்டுள்ளன.
பெர்சியன் வளைகுடா பகுதியில் அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் எந்த தாக்குதல் சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை. அப்பகுதியில் நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஒவ்வொரு கப்பல் மற்றும் அதன் ஊழியர்களுடன் தொடர்பில் உள்ளோம். ஹார்முஸ் வளைகுடா பகுதியில் 22 இந்திய கப்பல்களும் 611 இந்திய மாலுமிகளும் உள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து 14 ம் தேதி 81 ஆயிரம் டன் முர்பன் கச்சா எண்ணெயுடன் இந்திய கப்பல், தாயகம் நோக்கி வந்து கொண்டுள்ளது. இந்த கப்பலில் உள்ள மாலுமிகள் அனைவரும் நலமாக உள்ளனர். இக்கப்பல் முந்த்ரா துறைமுகத்தை நாளை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: 90க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள், நிலப்பகுதி வழியாக ஈரானில் இருந்து அஜர்பைஜானுக்கு வந்துள்ளனர்.அவர்களுக்கு இந்தியத் தூதரகம் உதவி செய்துள்ளது. விசா, மற்றும் குடியுரிமை ஆவணங்கள் உள்ளிட்டவை கிடைக்க தூதரகம் உதவி செய்தது. கடினமான நேரத்திலும் டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் முழுவீச்சில் செயல்படுகிறது. கடந்த சில நாட்களில் டெஹ்ரானின்புறநகர் பகுதிகளில் வசித்த இந்திய மாணவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
