கடைசியில, ‘பொண்ணு எவனயாச்சு லவ் பண்ணி ஓடியிருக்கும். போயி நீங்களே ஒழுங்கா தேடிப் பாருங்க’னு அவ்வளவு மோசமா லேடி இன்ஸ்பெக்டர் பேசுச்சு. என் பொண்ணை நான் அப்படியா வளர்த்திருக்கேன். ஒரு போன் கூட அனுமதி இல்லாம பேசாது கொள்ளாது. என் புள்ள மேல பழி போட்டு பேசுனாங்க. கடைசியில நாங்கதான் முள்ளு காட்டுக்கு நடுவுல கிடந்து புள்ளையோட உடம்ப கண்டுபிடிச்சோம். கை, கால், முகம்னு எல்லா பக்கமும் ஒரே காயம். இப்படி தூக்கி கொடுக்குறதுக்கா இத்தனை வருசம் வளர்த்து ஆள் ஆக்குனேன்…2 மாசம் முன்னாடி கூட அப்பா நான் கப்பல்ல வேலைக்கு போகணும். உன்னால படிக்க வைக்க முடியுமான்னு அத்தனை அருமையா கேட்டா…மகராசி…இன்னைக்கு அந்த புள்ள எங்க கூட இல்லையே..’ என குமுறுகின்றார் மாணவியின் தந்தை.

அவருடைய கண்ணீரெல்லாம் வற்றிப்போய் ஒரு மூலையில் சுருண்டிருந்தார்.
‘புள்ளையே போயிருச்சு. முறையா புகார் கொடுக்குறப்போ போலீஸ் ஒண்ணும் செய்யல. வர வேண்டிய அரசியல்வாதிங்க உடனே வரல. இப்போ அவ்வளவு பணம் கொடுக்கறோம், இவ்வளவு கொடுக்குறோம்னு சமாதானம் பேசுறாங்க. ஒரு புள்ள போயிருச்சு இன்னொரு புள்ள இருக்குல்ல. அதுக்காச்சு உதவும் பணத்தை வாங்கிக்கோங்கனு சொல்றாங்க. அப்படி சொல்றவங்க வீட்டில இப்டி ஒரு புள்ளையை தூக்கி கொடுத்துட்டு பணம் வாங்குவாங்களா? எங்களுக்கு பொண்ணை இப்படி சீரழிச்சது யாருன்னு தெரியனும். சனிக்கிழமை காலையில 10 மணிக்குள்ள குற்றவாளியை பிடிக்கிறோம்னு சொன்னாங்க. இப்போ வரை ஒரு துப்பு கூட கிடைக்கல போலீஸூக்கு. இவ்வளவு அலட்சியமான ஒரு போலீஸை பார்த்ததே இல்லை.
மக்கள்தான் எங்க பொண்ணுக்காக குரல் கொடுக்கணும். இன்னைக்கு எங்க வீடு பத்திக்கிட்டு எரியுது. நாளைக்கு இங்க இருந்து ஒரு கொள்ளிய எடுத்து உங்க வீட்டையும் கொளுத்துவாங்க…மக்கள்தான் இதையெல்லாம் தட்டிக் கேட்கணும்” என்கின்றனர் துக்கம் விசாரிக்க வந்திருந்த உறவினர்கள்.
‘முறையா புகார் கொடுத்தப்போ உதாசீனப்படுத்திட்டு, இப்போ எதுவுக்கு இவ்வளவு போலீஸூ?’ என்கிற கிராமத்தினரின் குமுறலில் அத்தனை நியாயம் இருக்கிறது. ஓர் அரசு இயந்திரத்தின் அலட்சியமும் மெத்தனப்போக்கும் எத்தகைய இழப்பை ஏற்படுத்தும் என்பதற்கு வேடநத்தமே சாட்சி.
‘காவல்துறையைக் கையில் வைத்துக் கொண்டு தேர்தலுக்காக ரீல்ஸ் போட்டுக் கொண்டிருந்த முதல்வர், இந்தக் குடும்பத்தின் குமுறலுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?’
சம்பவம் நடந்து ஏழாவது நாள் இன்று. இப்போது வரை காவல்துறை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
