புதுடில்லி: லோக்சபா எம்பிக்கள் 8 பேர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடிவு, சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் செய்யப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசினார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்கவே இண்டி கூட்டணி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். காகிதங்களை கிழித்து சபாநாயகர் மீதும் வீசினர்.
அதைத் தொடர்ந்து எம்பிக்களான மாணிக்கம், தாகூர், வெங்கடேசன், ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வாரிங், குர்ஜித் சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படேல் மற்றும் டீன் குரியகோஸ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டி கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவதுஅமர்வு நடந்து வருகிறது. இது தொடர்பாக சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
அவையை சமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் 8 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறுவது என முடிவுசெய்யப்பட்டது. இதற்கான தீர்மானம் நாளை மார்ச் 17 ம் தேதி நண்பகல் 12 மணிக்கு லோக்சபாவில் கொண்டு வரப்பட உள்ளது. இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது. மேலும் அவையின் கண்ணியம் கருதி பதாகைகள் மற்றும் ஏஐ உதவியுடன் தயார் செய்யப்பட்ட புகைப்படங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
