புதுடில்லி: ‘மேற்காசியாவில் நீடிக்கும் போர் காரணமாக, எரிவாயு வினியோக தொடரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கவலை அளிக்கிறது. அதே சமயம், நம் நாட்டில் எல்.பி.ஜி., எனப்படும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை’ என, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு, ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியை ஈரான் முடக்கியதால், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வினியோகம் தடைபட்டு உள்ளது.
முந்த்ரா வந்தது இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட நம் நாட்டின் ‘ஷிவாலிக்’ சரக்கு கப்பல் நேற்று குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது.
மற்றொரு எண்ணெய் கப்பலான ‘நந்தா தேவி’ இன்று குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்துக்கு வந்து சேரவுள்ளது. இதனால், எல்.பி.ஜி., எனப்படும் வீட்டு உபயோக சிலிண்டர் வினியோகம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, மத்திய பெட்ரோலியத் துறை இணை செயலர் சுஜாதா சர்மா நேற்று கூறியதாவது:
மேற்காசியாவின் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நம் நாட்டுக்கான எல்.பி.ஜி., எரிவாயு கப்பல்கள் வருகின்றன. அங்கு ஏற்பட்டுள்ள போர் காரணமாக, வினியோக தொடரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சற்று கவலை அளிக்கிறது.
இருந்தாலும், வீட்டு உபயோக சிலிண்டர்கள் நாடு முழுதும் தடையின்றி வினியோகிக்கப்பட்டு வருகின்றன. வர்த்தக சிலிண்டர்களுக்கு மட்டுமே ஒரு சில இடங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது.
எனவே, பதுக்கலை தடுத்து நிறுத்தும்படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
தற்போது கச்சா எண்ணெய் நம்மிடம் போதிய அளவுக்கு இருக்கிறது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் முழு வீச்சில் உற்பத்தியில் இறங்கிஉள்ளன.
பெட்ரோல் ‘பங்க்’குகள் இயல்பு நிலையிலேயே இயங்கி வருகின்றன. முற்றிலும் எரிபொருள் தீர்ந்து விட்டதாக எந்தவொரு வினியோகஸ்தரிடம் இருந்தும் தகவல் வரவில்லை. நம் நாட்டில் எரிபொருள் வினியோகம் கட்டுக்குள்ளேயே இருக்கிறது.
புதிய இணைப்பு எனவே, தட்டுப்பாடு தொடர்பாக நுகர்வோர் அச்சப்பட வேண்டாம்.
பி.என்.ஜி., எனப்படும் குழாய் வழி எரிவாயுவை முடிந்தவரை பயன்படுத்த நுகர்வோர் முயற்சிக்க வேண்டும்.
முக்கிய நகரங்களில் வசிக்கும் வர்த்தக எல்.பி.ஜி., நுகர்வோரும், பி.என்.ஜி., பயன்பாட்டுக்கு மாற வேண்டும். இதற்கான புதிய இணைப்புகளை, ‘இ – மெயில்’ மற்றும் கடிதம் மூலம் விண்ணப்பித்து பெறலாம்.
சி.ஜி.டி., எனப்படும் நகர்ப்புற எரிவாயு வினியோகத்தின் நுகர்வோர் இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
