திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மேல்முறையீடு: உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தனி நீதிபதியின் உத்தரவுப்படி தீபம் ஏற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான கலெக்டர், போலீஸ் கமிஷனரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு அடிப்படையில் 2025 டிச.,1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,’வழக்கமான இடங்களைத் தவிர, திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்,’ என உத்தரவிட்டார். இதற்கு எதிராக கோயில் செயல் அலுவலர், கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின.

ஜன.,6ல் இரு நீதிபதிகள் அமர்வு, ‘தமிழ் மாதமான கார்த்திகையில் வரும் கார்த்திகை தீபத் திருவிழாவி ன் போது கோயில் நிர்வாகம் தனது குழுவின் மூலம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்,’ என உத்தரவிட்டு மனுக்களை பைசல் செய்தது.

தீபத்துாணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என டிச.,1ல் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‘தீபத்துாணில் ராமரவிக்குமார் தரப்பில் தீபம் ஏற்ற போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்,’ என டிச.,4ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு நேற்று விசாரித்தது.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ரவீந்திரன், வீராகதிரவன்: ‘நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் கொண்ட குழுவை, தீபத்துாண் அமைந்துள்ள மலை உச்சிக்குச் சென்று 15 நிமிடம் அடையாள வழிபாடு நடத்த அனுமதிக்கலாம் என பரிந்துரைக்கிறேன். மார்ச் 18ல் போலீஸ் அதிகாரிகள் (கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன்) தகுந்த பதில் அளிக்காவிடில் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். அவர்கள் ஆஜராக வேண்டும்,’ என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மார்ச் 4ல் உத்தரவிட்டார். அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதையும் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்றனர்.

நீதிபதிகள் இன்று (மார்ச் 17) ஒத்திவைத்தனர்.

Source link