புதுடில்லி: டில்லி ரவுடி கோஷ்டி ஒன்றில் சேர்ந்திருந்த, பல குற்றங்களில் தொடர்புடைய, 29 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வட மேற்கு டில்லி மாவட்டத்தின் ஜஹாங்கிர்புரி பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வரும் ரவுடி கோஷ்டியாக, ஷேக் பிரோஸ் என்ற சைபுல் திங்க்ரா கோஷ்டி உள்ளது. இந்த கோஷ்டியுடன் பல வழக்குகளில் இணைந்து செயல்பட்டு வந்த ஜாவத் என்ற கல்லு தாதா என்பவரை, போலீசார் தேடி வந்தனர்.
இவர், ஏற்கனவே ஒரு முறை, கொள்ளையடிக்கும் போது நடந்த கொலையில், பத்தாண்டுகள் சிறை தண்டனை பெற்று, சமீபத்தில் தான் வெளியே வந்திருந்தார்.
அவரை பிற வழக்குகள் தொடர்பாக போலீசார் தேடி வந்தனர். அவர் ஜஹாங்கிர்புரி பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு விரைந்த போலீசார், துப்பாக்கி முனையில் அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
இளைஞரை கொல்ல முயன்ற சிறார்கள் ஜஹாங்கிர்புரி போலீசில் சிக்கினர்
புதுடில்லி: சிறுவன் ஒருவரை, இளைஞருடன் சேர்ந்து, சில சிறார்கள் தாக்கியதை தட்டிக் கேட்டவரை, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, இளைஞர் மற்றும் இரண்டு சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட மேற்கு டில்லி மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில், ஹர்ஜீத் சிங் சச்தேவா, 23, என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன், சென்று கொண்டிருந்தார். அப்போது, பியுஷ் என்ற இளைஞர், சில சிறார்களுடன், இன்னொரு சிறாரை தாக்கிக் கொண்டிருந்தனர்.
அதை பார்த்த சச்தேவா, அவர்களை தட்டிக் கேட்டார். இதனால் எழுந்த கோபத்தில், அந்த இளைஞர் மற்றும் அவருடன் இருந்த இரு சிறார்கள், சச்தேவாவை தாக்கினர். ஒரு கட்டத்தில் அவரை கொல்ல, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை அந்த சிறார்கள் துாக்கினர். அலறி அடித்து, அங்கிருந்து ஓடிய சச்தேவா, உதவி கோரினார். அதை பார்த்த அந்த பகுதிவாசிகள் ஓடி வரவே, அவரை தாக்கிய கும்பல் தப்பியோடி விட்டது.
இதையடுத்து, போலீசில் அவர் அளித்த புகாரின் படி, பியுஷ் மற்றும் இரண்டு சிறார்களை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரிக்கின்றனர்.
சாலை தடுப்பில் லாரி மோதி
டிரைவர் உட்பட இருவர் பலி
புதுடில்லி: அதிவேகமாக ஓட்டிச் சென்ற லாரி, பைக் மீது மோதியதில், இருவர் பலியாகினர்.
தென் கிழக்கு டில்லி மாவட்டத்தில் உள்ளது, ஓக்லா தொழில் பகுதி. அந்த பகுதிக்கு லாரியில் பொருட்களை ஏற்றி வந்த, உத்தர பிரதேசத்தை சேர்ந்த லோகேந்திரா என்பவர், நேற்று அதிகாலை, லாரியில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு பெட்ரோல் பங்க் அருகே நிகழ்ந்த விபத்தில், பைக்கில் வந்த இருவர் மீது லோகேந்திரா ஓட்டி சென்ற லாரி மோதியது. இதில், அந்த பைக்கை ஒட்டி வந்தவர் இறந்தார். அதையடுத்து, பதற்றத்தில் லாரி ஓட்டி வந்த லோகேந்திரா, ஓக்லா அருகே சென்ற போது, சாலை மைய தடுப்பில் மோதியது.
இதில், லாரி கவிழ்ந்ததில், லோகேந்திரா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இருவர் உடலையும் கைப்பற்றியுள்ள போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியகீதா காலனி எஸ்.ஐ., கைது
புதுடில்லி: ‘வரதட்சணை கொடுமை வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், எனக்கு, 20,000 ரூபாய் தர வேண்டும்’ என கேட்ட டில்லி போலீசின் எஸ்.ஐ., ஒருவரை கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
ஷாதாரா போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் உள்ள கீதா காலனி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக இருந்தவர் ரோடாஷ் குமார். இவர், குடும்ப வழக்குகள் சிலவற்றை விசாரித்து வந்தார். அவற்றில் ஒன்று, வரதட்சணை வழக்கு.
அந்த வழக்கிலிருந்து சம்பந்தப்பட்ட நபரை தப்பிக்க வைப்பதாக கூறி, 20 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டார் ரோடாஷ் குமார். அந்த பணத்தை கொடுக்க விரும்பாத அந்த நபர், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
லஞ்சம் கொடுக்கும் போது, மறைந்திருந்த போலீசார், ரோடாஷ்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
