புதுடில்லி, ‘டில்லி பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க வசதி செய்யும், பிங்க் ஸ்மார்ட் கார்டுகள் திட்டம், இன்னும், மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த கார்டுகளை வாங்க, பொதுமக்கள் அலறி அடிக்க தேவையில்லை’ என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறியுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்முவால், சமீபத்தில், டில்லியில் அறிமுகம் செய்யப்பட்டது, பிங்க் செஹலி ஸ்மார்ட் கார்டுகள். மெட்ரோ ரயில்கள், டில்லி டவுன் பஸ்கள் மற்றும் டி.டி.சி,. பஸ்களில் இந்த கார்டுகளை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என கூறப்படுகிறது.
நீட்டிப்பு அதனால், இந்த ஸ்மார்ட் அட்டைகளை வாங்க, பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள, 50 இடங்களில் பெரும்பான்மையான இடங்களில், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்குகின்றனர்.
இந்த திட்டம், விரைவில் முடிவுக்கு வருகிறது என கூறப்படுவதால், டில்லியில் பெண்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த கார்டுகளை வாங்க, பெண்கள் பலர் அலைமோதுகின்றனர். அவர்களுக்கு ஆறுதலாக, டில்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று கூறியதாவது:
பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க உதவும் பிங்க் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கும் திட்டம், இன்னும், மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, பெண்கள் எவ்வித அச்சமும் இன்றி, இந்த அட்டைகளை வாங்கிக் கொள்ளலாம்.
அவசரம் வேண்டாம் தேவைப்பட்டால், தற்போது வழங்கப்படும், 50 இடங்களுடன் கூடுதல் இடங்களில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். எனவே, பெண்கள் தங்களுக்கு வசதியான நாட்களில் இந்த மையங்களுக்கு சென்று, பிங்க் நிற ஸ்மார்ட் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வருவாய் துறையுடன் தொடர்புடைய பல அரசு மையங்களில் இந்த ஸ்மார்ட் அட்டைகள் வழங்கும் மையங்கள் செயல்படுவதால், நீண்ட வரிசை காணப்படுகிறது.
எனவே, ஸ்மார்ட் அட்டையை பெற பெண்கள் அவசரப்பட தேவையில்லை என்ற முதல்வரின் அறிவிப்பு பலருக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.
