ஆப்கன் மருத்துவமனை மீது பாக் ராணுவத்தினர் வான்வழி தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 250 பேர் காயம் அடைந்தனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் சமீபகாலமாக டி.டி.பி., பயங்கரவாத அமைப்பு விவகாரத்தில் மோதல் நிலவி வருகிறது. ஆப்கனில் இருந்து இந்த அமைப்பு செயல்பட்டு வருவதால், அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு அங்குள்ள தலிபான் அரசை பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. இந்த அமைப்புக்கும், தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என கூறி நடவடிக்கை எடுக்க ஆப்கன் மறுத்து வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான், ஆப்கன் எல்லையோரம் உள்ள டி.டி.பி., அமைப்பின் நிலைகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், அங்குள்ள டி.டி.பி., எனும் தெஹ்ரீக் – இ – தலிபான் பாக்., பயங்கரவாத அமைப்பின் மையங்கள் மற்றும் தலிபான் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 250 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் நடத்தியதை முதலில் மறுத்த பாகிஸ்தான், பிறகு ராணுவத்தினர் துல்லிய தாக்குதல் நடத்தினர் என்பதை ஒப்புக்கொண்டனர். ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷரபத் ஜமான் கூறியதாவது: பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்து போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனையை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளது. மருத்துவமனையின் அனைத்து பகுதிகளும் சேதம் அடைந்தது, என்றார்.

Source link