ஐ.டி.பி.ஐ., வங்கி தனியார்மயம் மத்திய அரசு கைவிட வாய்ப்பு: ஏலத்தில் குறைவாக விலை கேட்கப்பட்டதாக தகவல்

மும்பை:ஐ.டி.பி.ஐ., வங்கியின் பெரும்பான்மை பங்குகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சி கைவிடப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வங்கியின் பங்குகளை வாங்க முன்வந்த நிறுவனங்கள், அரசு நிர்ணயம் செய்த அடிப்படை விலையை விட குறைந்த விலையை கேட்டிருப்பதே, இதற்கு காரணம் என தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

ஐ.டி.பி.ஐ., வங்கியில் மத்திய அரசுக்கும், எல்.ஐ.சி., நிறுவனத்துக்கும் மொத்தம் 94.71 சதவீத பங்குகள் உள்ளன. இந்த நிலையில், அவ்வங்கியில் தங்கள் 60.72 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பதன் வாயிலாக, அதை முழுமையாக தனியார்மயமாக்க, கடந்த 2022 அக்., மாதம் முதல் அரசும், எல்.ஐ.சி., நிறுவனமும் முயற்சி செய்து வந்தன.

இதற்கான ஏலம் கடந்த பிப்., 6ம் தேதி அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிறுவனங்கள் குறிப்பிட்டு இருந்த ஏல தொகை, நிதி அமைச்சகத்தின் செயலர்கள் அடங்கிய குழு நிர்ணயம் செய்த விலையை விட மிக குறைவாக உள்ளது. இதனால் பங்கு விற்பனை நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

கடனில் தவித்த வங்கி

வாரா கடனில் சிக்கி தவித்து வந்த ஐ.டி.பி.ஐ., வங்கியை மீட்க எல்.ஐ.சி., கடந்த 2019 ஜனவரியில் முன்வந்தது. அப்போது 21,624 கோடி ரூபாய் முதலீடு செய்து 51 சதவீத பங்குகளை எல்.ஐ.சி., கையகப்படுத்தியது. தற்போது இந்த வங்கியின் லாபம் அதிகரித்து உள்ள நிலையில், முதலீட்டை திரும்ப பெறுவதற்காக அரசும், எல்.ஐ.சி.,யும் தங்களது பங்குகளை விற்க முடிவு செய்துள்ளன.

Source link