மதுரை: திமுகவின் பண பலம் ஜெயிக்காது. மக்களின் மன பலம் ஜெயிக்கும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி சார்பாக இபிஎஸ் தலைமையில் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.
ஆட்சியில் உள்ள திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை சொல்லி, ஒன்று, இரண்டை தவிர வேறு எதுவுமே செய்யாமல் மக்களை ஏமாற்றுகிற வகையில், திசை திருப்பியது.
முதல்வர் ஸ்டாலின் தங்களது குடும்பம் ஆள வேண்டும் என்பதற்காக பல்வேறு தவறான திட்டங்களை, தவறான செய்திகளை பரப்பி, துணை முதல்வர் உதயநிதியை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்பதற்காக, பல அறிவிப்புகளை சொல்லி இருக்கிறார்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் நேசிக்கப்படும் ரஜினிகாந்த். அவரை பற்றி ஆதவ் அர்ஜூனா மிகவும் அவதூறாக பேசியுள்ளார். விஜய் கண்டிக்காதது ஏன்? ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்க வேண்டும். எங்களிடம் தொகுதி பங்கீடு குறித்து எந்தவிதமான சிக்கலும் இல்லை.
வரும் தேர்தலில் மக்கள் பலம், மக்களாட்சி ஜெயிக்கும். மக்கள் என்றைக்கும் பணம், பதவிக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்கள். 5 வருடம் நிம்மதியாக வாழ வேண்டும். இந்த 5 வருடம் மக்கள் பட்ட பாடு போதாதா? திமுகவின் பண பலம் ஜெயிக்காது. மக்களின் மன பலம் ஜெயிக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
