முதல்வர் பதவி கொடுத்தாலும் கூட்டணி கிடையாது: ஆதவ்

சென்னை: ”முதல்வர் பதவியே கொடுத்தாலும் யாருடனும் கூட்டணி இல்லை,” என, த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

சென்னை பெரம்பூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் பயந்த ஒரே தலைவர் விஜய். அவர் மீதான பயத்தில் தான், முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அனுப்பி வைத்தார்.

‘அடித்து விட்டு வா’ என்றுதான் சொல்லி அனுப்பினர். ஆனால், கொன்று விட்டனர். அந்த பழியை த.வெ.க., மீது திணித்தனர். தற்போது, அவர்கள் மீதே சி.பி.ஐ., விசாரணை திரும்பியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், இனி எங்கு வேண்டுமானாலும் பிரசாரம் செய்யலாம். த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பணத்தை வைத்து தேர்வாவதில்லை.

ரஜினி எப்போதும் நம் அன்புக்குரியவர். அவரது மன்றத்தில் இருந்து வந்தவரை, நாம் மேடை அளித்து, பொறுப்பும் வழங்கி இருக்கிறோம். 234 தொகுதியிலும் த.வெ.க., தனித்துதான் போட்டியிடும். முதல்வர், துணை முதல்வர், 50 ‘சீட்’ என பல்வேறு வகைகளிலும் பேரம் பேசினர். ஆனால், விஜய் அதை மறுத்து விட்டார்.

ஜனநாயகன் படம் வெளியாகாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு காரணம் அரசியல் தான். கீழ்தரமான பிரசாரத்தை முன்வைத்து, ரஜினியை அரசியலுக்கு வர விடாமல் செய்தது தி.மு.க., தான். அதைத்தான் சொன்னேன். அ.தி.மு.க.,வும் ரஜினிக்கு எதிராக பிரசாரம் செய்தது. ரஜினி கட்சி ஆரம்பிக்க முயன்றபோது, அதை கடுமையாக எதிர்த்தவர் பழனிசாமி.

என் பேச்சால் ரஜினிக்கு வருத்தம் என்றால், அதற்காக மன்னிப்பு கோருகிறேன். முதல்வர் பதவியே தந்தாலும் யாருடனும் த.வெ.க., கூட்டணி சேராது. இவ்வாறு அவர் பேசினார்.

Source link