விழுப்புரம் மாவட்டம், சிந்தாமணிநல்லூர் வைத்தீஸ்வரர்: பௌர்ணமி-அமாவாசையில் வழிபட காரியஸித்தி நிச்சயம் | Viluppuram Chintamani Nallur Vaitheeswaran temple

மாதம்தோறும் பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாள்களில் இந்த ஆலயத்தில் தங்கியிருந்து வழிபட்டுச் சென்றால், காரியத் தடைகளும் சிரமங்களும் அகன்று, மனதில் நினைத்த காரியங்கள் விரைவில் நிறைவேறும் என்கிறார்கள்.

பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசிப் பெளர்ணமியில் ஈஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் நிகழும். இந்தக்கோயிலில் மகாளய அமாவாசை அன்று தையல்நாயகிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுமாம். அன்றைய தினம் பெண்கள் இந்தக் கோயிலுக்கு வந்து அம்பாளை தரிசித்து வழிபட்டால், குடும்பத்தில் சகல சௌபாக்கியமும் உண்டாகும். திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் கல்யாணம் தகையும்; மனதுக்கினிய மணவாளன் அமைவார் என்பது நம்பிக்கை.

சிந்தாமணிநல்லூர் வைத்தீஸ்வரர் கோயில்

சிந்தாமணிநல்லூர் வைத்தீஸ்வரர் கோயில்

கல்யாண வரம் வேண்டி வரும் பக்தர்கள், இங்குள்ள நர்த்தன விநாயகரையும் வேண்டி வழிபட்டுச் செல்கிறார்கள். இவரை வேண்டிக்கொண்டால் கல்யாண தோஷங்கள் விலகும் என்பது ஐதிகம். மட்டுமன்றி, நாக தோஷப் பரிகாரத் தலமாகவும் இந்தக் கோயில் திகழ்கிறது.

பிள்ளை வரம் வேண்டி வரும் தம்பதியர் இந்தக் கோயிலில் உள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டி, ஆலயத்தை முறைப்படி வலம் வந்து அம்பாளையும் மூலவரையும் வழிபட வேண்டும். இதன் மூலம் கிரகதோஷங்கள் மற்றும் பாதிப்புகள் நீங்கும்; விரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

தைப்பூசத்துக்கு மறுநாள் இங்கே நடைபெறும் இடும்பன் பூஜை பிரசித்திபெற்றது. இந்தப் பூஜையில் படைக்கப்படும் உணவை குழந்தை வரம் அருளும் மாமருந்தாகக் கருதுகிறார்கள் பக்தர்கள். கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு, மண்டியிட்டு இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட்டால், குழந்தை வரம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

தை மாதம் முதல் வாரம் ஏதேனும் இரண்டு நாள்களில் காலை 6 முதல் 7 மணிக்குள் சூரியன் தன் கிரணங்களால் இறைவனை பூஜிப்பது வழக்கமாம். ஆனால், தற்போது ஆலயத்தின் எதிரே மரம் வளர்ந்து கிளை விரித்து நிற்பதால், சூரியக் கதிர்கள் இறைவனை தரிசிப்பத்தைக் காண முடியவில்லை என்கிறார்கள்.

Source link