புதுடில்லி: காஸ் சிலிண்டர்களை கேட்டு, வினியோக மையங்களுக்கு நுகர்வோர்கள் நேரில் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக இணைச் செயலாளர் சுஜாதா சர்மா நிருபர்களுக்கு அளித்த பேட்டி;
எல்பிஜி வினியோகம் இன்னும் கவலைக்குரியதாகவே இருக்கிறது. இணையம் மூலமாக காஸ் சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்வதில் முன்னேற்றம் காணப்படுகிறது. தற்போதுள்ள சூழலில், கிட்டத்தட்ட 93 சதவீதம் பேர் இணையம் வாயிலாகவே முன்பதிவு செய்கின்றனர்.
பல்வேறு காஸ் சிலிண்டர் வினியோகிக்கும் மையங்களில் இப்போதும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன என்பது மறுக்க முடியாது. எனவே, இணையம் வாயிலாக முன்பதிவு செய்துள்ளவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். உங்களுக்கான காஸ் சிலிண்டர் உங்கள் வீட்டுக்கு வந்து வினியோகிக்கப்படும். காஸ் சிலிண்டர் ஏஜென்சிகளுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
தற்போது வரை கிட்டத்தட்ட 81 சதவீதம் காஸ் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. நேற்று வரை வினியோக சதவீதம் என்பது 53 ஆக இருந்தது. இது தற்போது 81 சதவீதம் என உயர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டுகிறது.
வணிக பயன்பாடு எல்பிஜி வினியோகத்தை பொறுத்தவரை, 15 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அதற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை பிறப்பித்து இருக்கின்றன. அனைத்து மாநிலங்களுக்கும் காஸ் சிலிண்டர் வினியோகம் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 12 மாநிலங்களில் ஏற்கனவே அவர்களுக்கான கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை பெற்றுவிட்டன.
இவ்வாறு சுஜாதா சர்மா கூறினார்.
