சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில், ஏப்., 23ம் தேதி சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை கட்டுப்படுத்தும் வகையில், தேர்தல் கமிஷன் 50,000 ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதை கண்காணிக்க, மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்போது வரை தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரூ.42.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் பறக்கும் படையினர் ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்களை பறிமுதல் செய்து இருக்கின்றனர். அதன் விவரங்கள் பின்வருமாறு:
ரொக்கம்: ரூ.2.37 கோடி
மதுபானம்: ரூ.0.18 கோடி
போதைப்பொருட்கள்: ரூ. 2.88 கோடி
விலைமதிப்பற்ற உலோகங்கள்: ரூ.16.42 கோடி
இலவசங்கள் / பிற பொருட்கள்: ரூ.20.80 கோடி
சட்டவிரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களை கவர வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.
