பழசெல்லாம் மறக்காம இருக்கணுமா… பல் தேய்ங்க பாஸ்! – ஆய்வறிக்கையும் அல்சைமர் அலெர்ட்டும்

வாய் சுகாதாரமின்மைக்கும் அல்சைமர் உள்ளிட்ட மறதி நோய்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகச் சொல்கிறது ‘கேர்க்வெஸ்ட் இன்ஸ்டிட்யூட்’டின் சமீபத்திய ஆய்வு ஒன்று. 

அதன்படி 2040-ல், அமெரிக்காவில் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

வாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோயைத் தடுக்கவோ அல்லது அதன் அறிகுறிகளைக் குறைக்கவோ முடியுமா என்பதைத் தீர்மானிப்பது மிகவும் அவசியம் என்பதையும் அந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது. 

மறதி… ஜாக்கிரதை! நலம் நல்லது-39 #DailyHealthDose

வயதான பிறகு வரும் மறதி நோயான அல்சைமருக்கும் வாய் சுகாதாரமின்மைக்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா என்ற அந்த ஆய்வில் சில முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, அல்சைமர் நோய் பாதித்த 50 முதல் 80 வயதினருக்கு, அல்சைமர் நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, மோசமான ஈறு பாதிப்பு இருப்பதும், குறிப்பாக… பற்கரை, பற்களைச் சுற்றியுள்ள எலும்பு இழப்பு, ஈறுகளில் ரத்தம் கசிவது போன்ற பிரச்னைகள் இருப்பது தெரிய வந்துள்ளன. 

அல்சைமர் பாதிப்புள்ளவர்களில் பலருக்கும் பற்கள் இழப்பு, ஈறு நோய்களுக்கான ரிஸ்க் இருப்பதும் தெரியவந்துள்ளது. முதியோர் பராமரிப்பு மையங்களில் வசிப்போருக்கு, வாய் சுகாதாரத்தைப் பராமரிப்பதிலும், முறையான பல் மருத்துவச் சிகிச்சையைப் பெறுவதிலும் நடைமுறை சவால்கள் இருப்பதால், அவர்கள் வாய் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட இப்படிப்பட்ட முதியோர்களுக்கு பல் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவது கடினமாக இருக்கலாம். அவர்களால் நீண்ட நேரம் உட்கார முடியாது அல்லது கருவிகளைக் கண்டு பயப்படலாம். அவர்களுக்கு வலி குறைந்த எளிய சிகிச்சைகள் (Minimally Invasive Treatments) மிகவும் உதவியாக இருக்கும் என்பதையும் அந்த ஆய்வறிக்கை உணர்த்தியுள்ளது.

நரம்பியல் சிகிச்சை  மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.
நரம்பியல் சிகிச்சை மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.

இந்த ஆய்வறிக்கை சொல்வது உண்மைதானா… வாய் சுகாதாரத்துக்கும் அல்சைமர் நோய்க்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா? சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரத்திடம் பேசினோம்.

”வாய் சுகாதாரம் மற்றும் அல்சைமர் நோய்க்கு இடையிலான தொடர்பு சற்றே சிக்கலானது. இது ஒரு சுழற்சி போன்றது… ஒன்றினால் மற்றொன்று பாதிக்கும்.  மூளை செல்களுக்கு உள்ளேயும் வெளியேயும் அமிலாய்டு (Amyloid) மற்றும் டாவ் (Tau) எனப்படும் புரதங்கள் நச்சுப் படிமங்களாகப் படிந்து, செல்களைச் சாகடிக்கின்றன.

இந்த நச்சுகளால் மூளை செல்கள் அழிவதால், காலப்போக்கில் மூளையின் அளவு சுருங்குகிறது. குறிப்பாக, நினைவாற்றலுக்குப் பொறுப்பு வகிக்கும் ஹிப்போகேம்பஸ் (Hippocampus) பகுதி முதலில் பாதிக்கப்படுகிறது. இப்படித்தான் அல்சைமர் பாதிப்பு ஏற்படுகிறது.

அல்சைமர் நோய் ஒருவரின் மூளையைப் பாதிப்பதால், அவர் சுய பராமரிப்பை (Self-care) மறந்து விடுகிறார். சிறுவயதில் கற்றுக்கொண்ட  அடிப்படைப் பழக்கங்கள் மறந்து போவதால், அவர்களின் வாய் சுகாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறது. சுய பராமரிப்பு என்பது நாம் வளரும்போது சமூக மற்றும் கலாசாரத் தொடர்புகளின் மூலம் கற்றுக்கொள்ளும் ஒரு விஷயம்.

இந்தத் திறன் இழக்கப்படும்போது, அந்த நபரின் ஒட்டுமொத்த சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதில் இயல்பாகவே வாய் மற்றும் பற்களின் சுகாதாரமும் அடங்கும். எனவே, அல்சைமர் நோயாளிகளுக்கு வாய் சுகாதாரமின்மையைக் காண்பது அசாதாரணமானது அல்ல.

சோம்பேறித்தனத்தாலோ அல்லது கவனக்குறைவாலோ பற்களைச் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால், வாயில் அடிக்கடி கிருமித் தொற்றுகள் (Infections) ஏற்படும்.

இன்னொரு புறம், சோம்பேறித்தனத்தாலோ அல்லது கவனக்குறைவாலோ பற்களைச் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால், வாயில் அடிக்கடி கிருமித் தொற்றுகள் (Infections) ஏற்படும். 

இந்தத் தொற்றுகள் உடலில் ஒருவித அழற்சி அல்லது வீக்கத்தை உண்டாக்குகின்றன. இந்த வீக்கம் மூளைக்குச் செல்லும்போது, அங்கும் பாதிப்பை (Neuroinflammation) ஏற்படுத்துகிறது. இதுதான் அல்சைமர் நோயில் மூளையில் ஏற்படும் மோசமான மாற்றங்களைத் தூண்டுகிறது என்று நம்பப்படுகிறது. 

மூளையில் நச்சுப் படிமங்கள் (Plaques and Tangles) உருவாகக் காரணமாகிறது. இதுவே அல்சைமர் நோய் தீவிரமடைய வழிவகுப்பதாகக் கருதப்படுகிறது. இந்தக் கருத்து கேட்பதற்குச் சரியாக இருப்பது போல தோன்றினாலும், இது இன்னும் அறிவியல்ரீதியாக முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. இது குறித்த விஞ்ஞானபூர்வ ஆய்வுகளும், தரவுகளும் வந்த பிறகுதான் உறுதியாகச் சொல்ல முடியும்” என்கிறார் டாக்டர் மீனாட்சி சுந்தரம்.

Source link