புதுடில்லி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு தொடர்பாக பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் எம்பி ராகுல், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராமர் கோயிலில் முறைகேடு நடந்து இருப்பதை நீங்கள் (பிரதமர் மோடி) அறிந்து இருப்பீர்கள். கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தை முழுநம்பிக்கை மற்றும் பக்தியோடு நன்கொடை வழங்கி பக்தர்கள் இந்த திருட்டுதனத்தால் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்பி மற்றும் அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பது பொதுமக்களுக்குத் தெரிந்த விஷயமாகும்.
இந்த மோசடி குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அறக்கட்டளை கணக்குகளை பொதுவெளியில் வெளியிட வேண்டும். பக்தர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம். இந்த விவகாரத்தில் பொறுப்புணர்வையும், உரிய தீர்வையும் உறுதி செய்வது தங்களது கடமையாகும்.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்டடவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு ராகுல், கார்கே கடிதத்தில் கூறியுள்ளனர்.
