-நமது நிருபர்-சென்னை: கூட்டணி குறித்து வரும் வதந்திகளை நம்பாதீர்கள். நம் தலைமையில் தான் ஆட்சி என்று இப்தார்

-நமது நிருபர்-

சென்னை: கூட்டணி குறித்து வரும் வதந்திகளை நம்பாதீர்கள். நம் தலைமையில் தான் ஆட்சி என்று இப்தார் நோன்பு திறப்பு விழாவில் விஜய் கூறினார்.

தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று 18ம் தேதி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்றார். இப்தார் நோன்பு திறந்த பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு தொழுகையில் அவர் கலந்து கொண்டார்.

பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது:

நாம் அரசியலுக்கு வந்ததில் இருந்தே நம்மை பற்றி நிறைய வதந்திகள், அந்த டீம், இந்த டீம் அப்படி எல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் இல்லையா? ஆனால் இவரு (தன்னையே குறிப்பிடுகிறார்) எந்த டீமும் கிடையாது. மக்களோட டீம்.. பீப்பிள்ஸ் டீம் (Peoples Team) என்று தெரிந்ததற்கு அப்புறம், வேற என்ன அவதூறு பரப்பலாம் என்று முயற்சி பண்ணி எல்லாமே அவர்களுக்கு வொர்க் அவுட் ஆகவில்லை.

கடைசியாக இந்த விஜய்யை என்னதான் பண்ணலாம் என்று நினைக்கும் போது இந்த கூட்டணி, அந்த கூட்டணியோட எல்லாம் சேர போகிறார் என்று ஒரு பொய்யான பிரசாரத்தை ஸ்டார்ட் பண்ணி… பண்ணிட்டு இருந்தாங்க. இந்த செய்திகளை எல்லாம் கேட்டு நீங்கள் குழப்பம் அடைந்து இருப்பீங்க.

அதனால் இங்கு மறுபடியும் ஓப்பனாக, தெளிவாக ஒரு விஷயத்தை நான் சொல்கிறேன். நான்…நாங்க எப்போதுமே மதசார்பற்ற கொள்கை, மதசார்பற்ற சமூகநீதி என்ற அந்த நிலைப்பாட்டில் எப்பவும் சமரசம் வைத்துக் கொள்ளவே மாட்டோம்.

நம்முடைய தலைமையில் தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். நம்ம முதல் மாநாட்டில் கூட, நான் சொன்னது மாதிரி, அரசியலில் யாருக்காகவும், எதற்காகவும், எந்த விதமான ஒரு சமரசமும் நாம் வச்சுக்க போறதே இல்ல. அந்த பேச்சுவார்த்தையே கிடையாது.

அதனால் யார் என்ன அவதூறு பரப்பினாலும், தயவுசெய்து அதை நம்பாதீர்கள். எல்லாம்வல்ல இறைவனின் அருளால் நாம் நினைச்ச டார்கெட்டை நம்மால் நிச்சயமாக அடைய முடியும். என்னுடைய இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ரமலான் நல்வாழ்த்துகள். நம்பிக்கையோடு இருங்கள், நல்லது நடக்கும், வெற்றி நிச்சயம்.

இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசினார்.

தனித்தே களம் காணும் தவெக

தமிழகத்தில் எந்த கூட்டணியை நோக்கி விஜய் நகர்கிறார் என்ற பேச்சுகள் பல வாரங்களாக ஓடிக் கொண்டு இருந்தன. அதிலும் கடந்த சில நாட்களாக கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக அவர் டில்லி சென்ற போதும் கூட அதிமுக பாஜவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக தான் பேச்சுகள் பரவிக்கிடந்தன.
இதனால் தவெக தொண்டர்கள் மட்டுமல்லாது, மற்ற கட்சிகள் மத்தியிலும் தவெக மீது ஒரு சந்தேக கண்ணோட்டமே காணப்பட்டது. இதுபற்றி விஜய் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் கருத்துகள் எழுந்தன.
இப்போது, ‘கூட்டணி தொடர்பான அனைத்து பேச்சுகளும் வதந்தி, நம்பாதீர்கள், நம் தலைமையில் தான் ஆட்சி’ என்று அவராகவே அறிவித்து விட்டதால், 234 தொகுதிகளிலும் தவெக தனித்துதான் போட்டி என்பது உறுதியாகிவிட்டது.

Source link